குடியேற்ற நிலையின் அடிப்படையில் சமூக உதவி விதிகளில் Ontario மாகாணம் மாற்றங்களைச் செய்கிறது.
கனடாவில் சட்டப்பூர்வ குடியேற்ற அந்தஸ்து இல்லாதவர்கள் சமூக உதவித் தொகையைப் பெறுவதை தடுக்கும் வகையில், Ontario மாகாணம் புதிய விதிமுறைகளை அமுல்படுத்தி வருகிறது.
முதல்வர் Doug Ford இந்த மாற்றத்தை ஏற்படுத்த உறுதியளித்தார்.
பல தசாப்தங்களுக்கு முன்னர், தற்போது காலாவதியாகிவிட்ட தற்காலிகப் பணி அனுமதியுடன் கனடாவிற்கு வந்த ஒருவருக்கு, Ontario Works கொடுப்பனவுகளை வழங்கிய தீர்ப்பாயத்தின் தீர்ப்பு குறித்த ஊடகச் செய்திகளைத் தொடர்ந்து, முதல்வர் இந்த மாற்றத்தை உறுதியளித்தார்.
கடினமான சூழலில் சிக்கியுள்ளவர்களுக்கு தனது அரசாங்கம் எப்போதும் ஆதரவு வழங்கும் என Doug Ford கடந்த மாதம் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், “கனடாவில் சட்டவிரோதமாக வசிப்பவர்கள் இதில் அடங்கமாட்டார்கள்” எனவும் அவர் அதில் தெளிவுப்படுத்தினார்.
Ontario Works, Ontario மாற்றுத்திறனாளிகள் ஆதரவுத் திட்டம் தொடர்பான விதிமுறைகளை தனது அரசாங்கம் தற்போது திருத்தியுள்ளது என சமூக சேவைகள் அமைச்சர் Michael Parsa வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கனடாவில் சட்டப்பூர்வமாக வசிப்பதற்கு அனுமதிக்கப்பட்ட, நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் மக்களுக்காகவே வரி செலுத்துவோரின் பணம் செலவிடப்படுவதை இது உறுதி செய்யும் எனவும் Michael Parsa கூறினார்.
கனடாவில் சட்டவிரோதமாக வசிப்பவர்கள், கல்வி அனுமதி அல்லது பணி அனுமதி போன்ற தற்காலிக அடிப்படையில் தங்குவதற்கு மட்டுமே அங்கீகாரம் பெற்றவர்கலுக்கு சமூக உதவி பெறத் தகுதி இல்லை என இந்த மாற்றங்கள் குறிப்பிடுகின்றன.
