கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணையின் போது Toronto காவல்துறை அதிகாரி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
திருடப்பட்ட மின்சார மிதிவண்டி (e-bike) குறித்த விசாரணையின் போது காவல்துறை அதிகாரி சுடப்பட்டதில் படுகாயம் அடைந்தார்.
நகரின் மையப்பகுதியில் திருட்டுச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திக் கொண்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் சுடப்பட்டதை தொடர்ந்து, ஒரு சந்தேக நபர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக Toronto காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொள்ளைச் சம்பவம் குறித்த தகவலின் பேரில், வியாழக்கிழமை (13) அதிகாலை சுமார் 3:20 மணி அளவில் நகரின் St. James Town பகுதிக்குக் காவலர்கள் அழைக்கப்பட்டதாக Toronto காவல்துறையின் துணைத் தலைவர் Lauren Pogue தெரிவித்தார்.
இதில் அதிகாரிகள் ஒரு சந்தேக நபரை கண்டுபிடித்ததை அடுத்து, சிறிது தூரம் அவரைத் துரத்திச் சென்றனர்.
கைது நடவடிக்கையின் போது, சந்தேக நபரால் காவல்துறை அதிகாரி சுடப்பட்டார்.
சுமார் மூன்று ஆண்டுகளாக காவல் துறையில் பணியாற்றி வரும் அந்த அதிகாரி அவசரமாக St. Michael மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவர் தற்போது தீவிரமான, ஆனால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாத காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதில் காவல்துறை அதிகாரிகள் பதிலுக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளவில்லை என Lauren Pogue தெரிவித்தார்.
சந்தேக நபர் சிறிது தொலைவில் அடையாளம் காணப்பட்டு காவலில் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த கைது நடவடிக்கையின் போது ஒரு துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
அடையாளம் வெளியிடப்படாத 27 வயதான சந்தேக நபர் துப்பாக்கி தொடர்பான குற்றங்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் அடிப்படையில் பிணையில் இருந்தவர் என தெரியவருகிறது.
Peel பிராந்தியம், Waterloo மலரோ; துப்பாக்கி உட்பட்ட குற்றங்களுக்காகவும் அவர் தேடப்பட்டு வருவதாக Lauren Pogue செய்தியாளர்களிடம் கூறினார்.
27 வயதுடைய சந்தேக நபர் எதிர்கொள்ளும் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
இந்த திருட்டில் ஈடுபட்ட இரண்டாவது சந்தேக நபர் தொடர்ந்து காவல்துறையினரால் தேடப்படுகிறார்.
