கனடிய தமிழர்களின் அரசியல் வெளிப்பாடுகளை கட்டுப்படுத்த கனடாவை இலங்கை அரசாங்கம் வலியுறுத்துகின்றது.
விடுதலைப் புலிகள் அமைப்பை ஆதரிக்கும் செயற்பாடுகளை கனடா அனுமதிக்க கூடாது என இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் Isabelle Catherine Martin ஆகியோருக்கு இடையில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற சந்திப்பில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இலங்கையில் பிரிவினைவாத சிந்தனைகளை ஊக்குவிக்கும் எந்தச் செயல்பாடுகளையும் கனடாவில் அனுமதிக்கக்கூடாது என என இந்த சந்திப்பில் அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை விடுத்தார்.
தமிழர் சுயநிர்ணய உரிமையுடன் தொடர்புடைய தமிழ் அரசியல் வெளிப்பாடுகள், செயல்பாடுகளை ஒடுக்க அவர் வலியுறுத்தினார்.
November 21-ஆம் திகதியை தமிழீழ தேசியக் கொடி தினமாக அங்கீகரிப்பதற்கு Brampton நகரம் எடுத்த முடிவைத் தொடர்ந்து இந்த எதிர்வினை முன்னெடுக்கப்பட்டது.
தமிழீழத் தேசியக் கொடி நாளை அங்கீகரிக்கும் Brampton நகர சுற்றுநிருபம் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.
Brampton நகர முதல்வர் Patrick Brown இந்தப் பிரகடனத்தை நகர சபை அமர்வின் போது அறிவித்திருந்தார்.
பின்னர் தமிழீழத் தேசியக் கொடி நாளில் அவர் நகர சபை வளாகத்தில் தமிழீழத் தேசியக் கொடியை Patrick Brown ஏற்றி வைத்தார்.
இந்த நிலையில் இனக் குழுக்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சிகளை கனடிய அரசாங்கம் தடுக்க வேண்டிய அவசியத்தை தனது சந்திப்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியிருந்தார்.
விடுதலைப் புலிகள் இயக்கம் கனடாவில் மத்திய அரசாங்கத்தால் தொடர்ந்து தடை செய்யப்பட்டுள்ளது என்பதை இந்த சந்திப்பில் Isabelle Catherine Martin உறுதிப்படுத்தினார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது.
