அமெரிக்க ஜனாதிபதியாக Donald Trump பதவி வகிக்கும் போது Quebec இறையாண்மை குறித்த வாக்கெடுப்பை நடத்த போவதில்லை என PQ தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் தனது கட்சியின் முன்னுரிமைகளை PQ தலைவர் செவ்வாய்க்கிழமை (18) காலை சமூக ஊடகங்கள் வாயிலாக மீண்டும் வலியுறுத்தினார்.
அமெரிக்க ஜனாதிபதியாக Donald Trump பதவியில் இருக்கும் வரை, Quebec இறையாண்மை குறித்து Parti Québécois அரசாங்கம் வாக்கெடுப்பு நடத்தாது என Paul St-Pierre Plamondon உறுதிப்படுத்தினார்.
தனது கட்சி ஆட்சிக்கு வந்தால், தனது முதல் பதவிக்காலத்தில் Quebec மாகாண சுதந்திரம் குறித்து மக்களிடம் அது ஆலோசனை நடத்தும் என கூறிய அவர், Donald Trump அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கும் வரை, அந்த பொது வாக்கெடுப்பு நடக்காது என தெளிவுபடுத்தினார்.
வெள்ளை மாளிகையில் Donald Trump-பின் இரண்டாவது பதவி காலம் முடிவடையும் நாளான 2029 January 20-க்கு முன்னதாக, இறையாண்மை குறித்த இந்த விவகாரம் வாக்கெடுப்புக்கு வராது என அவர் கூறினார்.
Quebec மாகாண அரசியல் எதிர்காலம் போன்ற மிக முக்கியமான ஒரு விவகாரத்திற்கு, நன்கு அறிந்து கொண்ட நிலையிலான, அமைதியான விவாதத்தை அனுமதிக்கும் சூழல் தேவைப்படுகிறது என Paul St-Pierre Plamondon கூறினார்.
அமெரிக்க அரசியலின் கொந்தளிப்புகளாலோ, கணிக்க முடியாத ஒரு ஜனாதிபதியின் உணர்ச்சிவசப்பட்ட வெளிப்பாடுகளாலோ அல்லது அச்சமூட்டும் பிரச்சாரங்களாலோ இது திசைதிருப்பப்பட கூடாது எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.
அண்மைக்காலத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படக்கூடிய சாத்தியக்கூறை தவிர்ப்பதன் மூலம், Quebec மாகாண மக்களுக்கு பயனளிக்கும் வகையில் தனது முன்னுரிமைகளின் அடிப்படையில் PQ கட்சியால் செயல்பட முடியும் எனவும் அவர் கூறினார்.
இந்த நிலையில் PQ கட்சித் தலைவரின் வாக்குறுதியை “பொறுப்பற்றது” என Quebec முதல்வர் Christine Fréchette செவ்வாயன்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
ஏற்கனவே நிலவிவரும் அதிகப்படியான நிச்சயமற்ற தன்மையின் மத்தியில் இது அரசியல் ரீதியான நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தும் என அவர் கூறினார்.
Donald Trump-பின் காரணமாக Paul St-Pierre Plamondon பின்வாங்குவதைக் காண்பது கவலையளிப்பதாக Québec Conservative கட்சியின் தலைவர் Éric Duhaime கூறினார்.
Quebec மாகாணத்தின் எதிர்காலத்தை அமெரிக்க நிர்வாகம் தீர்மானிக்க கூடாது எனக் கூறிய அவர், Quebec மக்களே அதைத் தீர்மானிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
கனடா மீதான அமெரிக்காவின் புதிய சுற்று வரிக் கட்டணங்களை விதிப்பதற்கான காலக்கெடு நெருங்கும் வேளையில் Paul St-Pierre Plamondon அறிவிப்பு வெளியிடப்பட்ட நேரம் திட்டமிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டினர்.
October 5-ஆம் திகதிக்குள் நடைபெறவிருக்கும் மாகாண தேர்தலுக்கான சமீபத்திய கருத்துக் கணிப்புகள், PQ முன்னிலையில் இருப்பதைக் காட்டுகின்றன.
