கனடாவின் தேசிய பொது எச்சரிக்கை முறையை பயன்படுத்தும் வசதியை உள்ளூர் அதிகாரிகளுக்கு வழங்குவதாக Ontario அறிவித்தது.
Ontario மாகாண அவசரகால தயார்நிலை அமைச்சர் Jill Dunlop ஞாயிற்றுக்கிழமை (19) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
மாகாணத்தின் வடக்குப் பகுதிகளை பெரிதும் பாதிக்கும் காட்டுத்தீயில் இருந்து மக்கள் தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.
நகர முதல்வர்கள், முதற்குடியினர் தலைவர்கள், காவல்துறை தலைவர்கள், ஏனைய அரசாங்க, அவசரகால மேலாண்மை அதிகாரிகள் “Alert Ready” பொது எச்சரிக்கை செய்திகளை தொலைக்காட்சி, வானொலி, அலைபேசி சாதனங்கள் வழியாக குடியிருப்பாளர்களுக்கு அனுப்புமாறு இனி கோரலாம் என அமைச்சர் தெரிவித்தார்.
சூறாவளிகள், காட்டுத்தீ, Amber Alerts போன்ற அவசர நிலைகள் குறித்து பொதுமக்களை எச்சரிக்க நாடு முழுவதும் “Alert Ready” முறை பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஆண்டு ஏற்பட்ட தீவிர காட்டுத்தீ சூழலை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படுவதாகவும், உயிர் அல்லது பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழல்களில் “Alert Ready” செய்திகளை அனுப்ப முடியும் எனவும் Jill Dunlop தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் 1,000 , வடக்கு Ontario-வில் 200 என தீவிரமான காட்டுத்தீக்கள் எரிந்து கொண்டிருக்கின்றன.
இந்தக் காட்டுத் தீயில் இருந்து தப்பி வருவோருக்கு உதவ வரவேற்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக முதல்வர் Doug Ford சனிக்கிழமை (18) தெரிவித்தார்.
வடக்கு Ontario-வில் சமீபத்தில் பெய்த மழை, சில காட்டுத்தீக்களின் வேகத்தைக் குறைக்க உதவியுள்ளதாக மாகாணம் தெரிவித்துள்ளது.
ஆனால், காட்டுத்தீயை அணைக்க அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்ய வேண்டியது அவசியம் என இயற்கை வளத்துறை அமைச்சர் Mike Harris சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
Ontario வடக்கிலுள்ள பல சமூகங்களைச் சேர்ந்த மக்கள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுள்ளனர் அல்லது வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் சில சமூகங்கள் வெளியேற்றப்பட கூடிய சூழலுக்குத் தயாராகி வருகின்றன.
மக்கள் வெளியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்ட விதம் தொடர்பாக Ontario மாகாணம் தொடர் விமர்சனங்களை எதிர் கொண்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
