கடுமையான காட்டுத்தீ காரணமாக பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுவரும் கனடாவுக்கு உதவி வழங்காததற்காக அமெரிக்க ஜனாதிபதியை Ontario மாகாண முதல்வர் கடுமையாக விமர்சிக்கிறார்.
வடக்கு Ontario காட்டுத்தீயின் புகை அமெரிக்காவுக்கு பரவியுள்ள நிலையில், கனடா மீது புதிய வரிகளை விதிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump எச்சரித்துள்ளார்.
இந்த அச்சுறுத்தல் “முற்றிலும் அபத்தமானது” என Ontario மாகாண முதல்வர் Doug Ford கூறியுள்ளார்.
குறை கூறிக்கொண்டு இருப்பதற்கு பதிலாக ஏதேனும் உதவிகள் வழங்க Donald Trump ஏன் முயற்சிக்கக் கூடாது என Doug Ford கேள்வி எழுப்பினார்
அமெரிக்காவை ஆயிரக்கணக்கான காட்டுத்தீ பாதித்து வருவதை சுட்டிக்காட்டிய Doug Ford , கனடா அதன் பாதிப்பு குறித்து ஒருபோதும் குறை கூறியதில்லை என திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
Ontario மாகாணத்தின் வடமேற்குப் பகுதியில் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் 200 காட்டுத்தீகள் தொடர்பாக, Donald Trump கனடிய அரசாங்கத்தை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இந்த காட்டுத்தீ கனடாவிலும், அமெரிக்காவிலும் காற்றின் தரத்தை குறைத்துள்ளது.
கனடா தனது காடுகளை முறையாகப் பராமரிக்காததற்கு நாங்கள் அந்நாட்டையே பொறுப்பாக்குகிறோம் எனவும் Donald Trump தெரிவித்தார்.
பிரதமர் Mark Carney இந்த விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் காட்டுத்தீயை நிர்வகிப்பது அமெரிக்கா உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள நாடுகள் பகிர்ந்து கொள்ள வேண்டிய பொறுப்பு என விமர்சனங்களை Mark Carney மறுத்துள்ளார்.
தீ விபத்துகள் “இயற்கையின் செயல்” என கூறி Doug Ford அதே கருத்தை எதிரொலித்தார்
