கனடாவில் இந்த ஆண்டு நடத்தப்பட்ட 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பு உலகிலேயே அதிக பங்கேற்பு விகிதத்தை எட்டியுள்ளது.
கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் திங்கட்கிழமை (14) இந்தத் தகவலை வெளியிட்டது.
கனடியர்களின் ஜனநாயகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் இது அமைந்துள்ளது என புள்ளிவிவரத் திணைக்களம் கூறியது.
இந்த ஆண்டு நடத்தப்பட்ட 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பு 98.4 சதவீதம் பதில் விகிதத்தை பதிவு செய்து புதிய சாதனையை படைத்துள்ளது என கனடா புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது கடந்த 2021-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பில் பதிவான 98 சதவீதத்தை விட அதிகமாகும்.
மேலும், கனடிய வரலாற்றிலேயே மிக உயர்ந்த பதில் விகிதமாகக் கருதப்படும் 2016-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பு சாதனையை (98.4%) இது தற்போது சமன் செய்துள்ளது.
இந்த அசாத்திய பங்கேற்பு விகிதம் கனடாவை உலகளவிலான கணக்கெடுப்புகளில் முதன்மை இடத்தில் நிறுத்தியுள்ளது என புள்ளிவிவர திணைக்களத்தின் உதவித் தலைமை புள்ளிவிவர நிபுணர் Geoff Bowlby பாராட்டியுள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பை முழுமையாக பூர்த்தி செய்வது என்பது எமது ஜனநாயகத்தின் மிக முக்கிய அங்கம் எனவும் அவர் விளக்கினார்.
இது நாட்டின் எதிர்கால திட்டமிடல்களுக்கு மிகத் துல்லியமான வழிகாட்டியாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2026 மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவங்களை திருப்பி அனுப்புமாறு சமூக வலைத்தளங்களில் பரவிய ‘Return to sender” என்ற எதிர்மறைப் பிரச்சாரத்தையும் மீறி, இந்த ஆண்டின் கணக்கெடுப்பு வரலாற்றுச் சிறப்புமிக்க பதில் விகிதத்தை பதிவு செய்துள்ளது.
கனடியர்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை உணர்ந்து பெருவாரியாகப் பங்கேற்று இந்த அசாத்திய சாதனையை நிகழ்த்தியுள்ளனர் என புள்ளிவிவரத் திணைக்களம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கனடாவின் புள்ளியியல் சட்டத்தின்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது சட்டப்பூர்வமாக கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் இறுதி முடிவுகள் அடுத்த ஆண்டு ஏழு தனித்தனி அறிக்கைகளாக வெளியிடப்படும் என புள்ளிவிவரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
