Ontario மாகாணத்தின் பெரும் பகுதியில் புதன்கிழமை (02) கடும் மழை பெய்தது.
இதில் Toronto நகரில் பெய்த “100 ஆண்டுகளில் இல்லாத மிகக் கடுமையான புயல், பெருமழை” காரணமாக நகரின் பல பகுதிகள் கடுமையான வெள்ளத்தில் மூழ்கின.
எனினும், தற்போது நகரைச் சீரமைக்கும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், பொதுச் சேவைகள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Toronto-வில் வழக்கமாக August மாதம் முழுவதும் பெய்ய வேண்டிய சராசரி மழையின் அளவு 78 mm ஆகும்.
ஆனால், புதன் இரவு சில மணி நேரங்களிலேயே 150 mm அளவு மழை பெய்ததாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இந்த கனமழையால் Don நதியில் (Don River) வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், Don Valley Parkway நெடுஞ்சாலையின் பல பகுதிகள் மூடப்பட்டன.
நகரின் பல பகுதிகளில் மரங்கள், மின் கம்பிகள் சரிந்து விழுந்ததில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்தனர்.
மேலும், சுரங்கப்பாதை போக்குவரத்து, படகுச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
Toronto தீயணைப்புத் துறைக்கு 24 மணி நேரத்தில் சுமார் 1,500 அவசர அழைப்புகள் வந்தன.
இது நகர வரலாற்றில் பதிவான இரண்டாவது மிக அதிகப்படியான அழைப்பு எண்ணிக்கையாகும்.
இந்த நிலையில் “நகரின் அனைத்து சாலைகளும் சீரமைக்கப்பட்டு, ஒவ்வொரு குடியிருப்பாளருக்கும் மின்சாரம் கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்” என வியாழக்கிழமை (03) காலை செய்தியாளர்களை சந்தித்த Toronto நகர முதல்வர் Olivia Chow உறுதியளித்தார்.
வியாழன் மாலை நிலவரப்படி Toronto நகரில் 90 சதவீத வீடுகளுக்கு மின்சாரம் மீட்டெடுக்கப்பட்டுள்ளதுடன், மூடப்பட்ட நெடுஞ்சாலைகளும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
