கனடா அமெரிக்காவின் ‘துணை நிறுவனம்’ அல்ல என கனடிய பிரதமர் Mark Carney தெரிவித்தார்.
கனடா மீண்டும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என உறுதிப்படுத்திய அவர், அமெரிக்காவின் “துணை நிறுவனமாக” நடத்தப்படுவதை கனடா ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது என தெளிவுபடுத்தினார்.
வார இறுதியில் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump இறக்குமதி வரிகளை விதித்து, திங்கட்கிழமை (24) மேலும் பல வரிகளை விதிப்பதாக அச்சுறுத்தியதை தொடர்ந்து, பிரதமரின் இந்தக் கருத்து வெளியானது.
கனடாவுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump தீவிரப்படுத்தி வரும் வர்த்தகப் போரில் இருந்து உலகெங்கிலும் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் “பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்” எனவும் அவர் மேலும் கூறினார்.
இரு தரப்புக்கும் பயனளிக்கக்கூடிய ஒரு ஒப்பந்தம் சாத்தியம் என குறிப்பிட்ட அவர், அது கனடாவின் இறையாண்மையையும் சுதந்திரத்தையும் மதிக்கும் வகையிலும் இருக்க வேண்டும் எனவும் Mark Carney மேலும் கூறினார்.
அமெரிக்காவிடம் “சரியான அணுகுமுறை” இருக்கும்போது, கனடா பேச்சுவார்த்தை மேசைக்கு மீண்டும் திரும்பும் எனவும் கனடிய பிரதமர் வலியுறுத்தினார்.
