கனடாவும் அமெரிக்காவும் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய முயற்சிக்கும் நிலையில், வரிக் கட்டண விதிப்புக்கான காலக்கெடுவை அமெரிக்க ஜனாதிபதி நீட்டித்துள்ளார்.
கனடியப் பொருட்கள் மீது 50 சதவீத அளவில் புதிய சுங்க வரிகளை அமெரிக்கா விதிப்பதற்கு முன்னதாக, கனடாவும் அமெரிக்காவும் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளதாக Donald Trump தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை (19) முதல் அமுலுக்கு வரவிருந்த, கனடா மீதான 50 சதவீத சுங்க வரிகளை மூன்று நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளதாக Donald Trump ஒரு சமூக வலைதள பதிவில் செவ்வாய்க்கிழமை (18) பின்னிரவில் தெரிவித்தார்.
ஆவணங்கள் இறுதி செய்யப்படுவதற்கு உட்பட்டு, கனடாவும் அமெரிக்காவும் ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளன என்ற நிலையில் இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக Donald Trump தெரிவித்துள்ளார்.
சுங்க வரிகள் அமுலுக்கு வருவதற்கு முன்னதாக, இரு நாடுகளும் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு Donald Trump ஆரம்பத்தில் August 19-ஆம் திகதியை காலக்கெடுவாக நிர்ணயித்திருந்தார்.
சுங்க வரி காலக்கெடுவிற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, செவ்வாய் பிற்பகல் கனடிய பிரதமரும் அமெரிக்க ஜனாதிபதியும் தொலைபேசியில் உரையாடி இருந்தனர்.
கடந்த இரண்டு நாட்களில் இரு நாடுகளின் தலைவர்கள் பேசிக்கொண்ட இரண்டாவது நிகழ்வு இதுவாகும்.
இரண்டு நாடுகளின் தலைவர்களின் தொலைபேசி உரையாடலுக்குப் பின்னர், பேச்சுவார்த்தை நிலைப்பாடுகளில் உள்ள இடைவெளியைக் குறைக்கும் முயற்சியாக, கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி Jamieson Greer, வர்த்தகச் செயலாளர் Howard Lutnick ஆகியோருடன் மீண்டும் பேசினார்.
இரு தரப்பினரும் ஒரு இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மிக நெருக்கமாக இருப்பதாகவும், அதற்கான செயல்முறைக்கு மாதக்கணக்கில் அல்லாமல் சில நாட்களே ஆகும் எனவும் பேச்சுகள் குறித்த தகவல் அறிந்த வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது.
“நாங்கள் அந்த இலக்கை அடைவோம்,” என இதில் அமெரிக்கத் தரப்பு வட்டாரம் தெரிவித்தது.
இரு தரப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்ய “இன்னும் சில நாட்கள்” ஆகும் என கனடியத் தரப்பு ஒன்று தெரிவித்தது.
கனடியப் பேச்சுவார்த்தையாளர்கள் “பாகுபாடுகளை நீக்குவதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியதால்”, இந்த இடைநிறுத்தத்தை நிர்வாக அதிகாரிகள் பரிந்துரைத்ததாகச் அமெரிக்க ஜனாதிபதியின் அறிவித்தல் வெளியான சில நிமிடங்களுக்குப் பின்னர் வெளியான வெள்ளை மாளிகையின் அறிவிப்பு தெரிவித்தது.
இரு நாடுகளும் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ள போதிலும், “இன்னும் செய்ய வேண்டிய முக்கியமான பணிகள் உள்ளன” என பிரதமர் Mark Carney ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதியின் அறிவிப்பைத் தொடர்ந்து Mark Carney ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக சவால்களுக்கு தீர்வு காண அமெரிக்காவுடன் “தீவிரமான பேச்சுவார்த்தைகளை” கனடா நடத்தியுள்ளதாக Mark Carney தெரிவித்துள்ளது.
நாங்கள் இப்பணியை தொடர்ந்து மேற்கொள்ளும் அதே வேளையில், கனடா தனது உள்நாட்டில் வலிமையான, அதிக சுதந்திரமான, அதிக போட்டித்தன்மை வாய்ந்த பொருளாதாரத்தை உருவாக்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது என கனடிய பிரதமரின் அறிக்கை தெரிவித்தது.
