ஈரானிய ஆட்சியின் உறுப்பினர் ஒருவர் கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்டதை CBSA உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரானிய ஆட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர், அவரது இறுதி நேர மேல்முறையீட்டை நீதிபதி தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்.
Syed Salman Samani கனடாவை விட்டு வெளியேற்றப்பட்டதாக கனடிய எல்லைச் சேவைகள் முகமை தெரிவித்துள்ளது.
அவர் ஈரானின் முன்னாள் உள்துறை துணை அமைச்சரும் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளரும் என்பது குறிப்பிடத்தக்கது.
“பொது நலன் கருதி, Syed Salman Samani-யை கனடாவிலிருந்து வெளியேற்றியுள்ளதை உறுதிப்படுத்த முடியும்,” என CBSA ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஈரானின் அடக்குமுறை அரசாங்கத்தைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் கனடாவிற்குள் நுழைவதை தடை செய்யும் 2022-ஆம் ஆண்டு கொள்கையின் கீழ் வெளியேற்றப்படும் இரண்டாவது அரச அதிகாரி இவராவார்.
CBSA தகவலின்படி, 2021 October-ரில் கனடாவுக்கு வருவதற்கு முன்னர் , Syed Salman Samani 2007 முதல் 2021 வரை இஸ்லாமியக் குடியரசில் ஒரு “தொழில்முறை அரசியல்வாதியாக” இருந்தார்.
குடியேற்ற, அகதிகள் வாரியம் 2024-இல் அவரை நாடு கடத்த உத்தரவிட்டது.
இந்த வாரம் வெளியிடப்பட்ட தீர்ப்பில், மத்திய நீதிமன்றம் நாடு கடத்தலுக்கு எதிரான அவரது மேல்முறையீட்டை நிராகரித்தது.
ஈரானிய அரசாங்கத்தின் அனைத்து “உயர்” அதிகாரிகளும் கனடாவிற்குள் நுழைவதை கனடிய மத்திய அரசாங்கம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தடை செய்தது.
ஆனால், அவர்களை நாட்டே விட்டு வெளியேற்றுவதில் கனடிய அரசாங்கம் சவால்களை சந்தித்து வருகிறது.
June 30 அன்று வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, கனடாவில் வசிக்கும் ஈரானிய ஆட்சியின் “உயர் அதிகாரிகள்” என சந்தேகிக்கப்படுபவர்கள் மீது CBSA 181 விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ஈரானிய ஆட்சியின் உயர்மட்ட அதிகாரிகளாக கருதப்படும் 37 நபர்களை CBSA இதுவரை அடையாளம் கண்டுள்ளது என CBSA தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிப்பதற்கு முன்னரே அவர்களில் எட்டு பேர் கனடாவை விட்டு வெளியேறினர்.
ஈரானிய ஆட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில், மேலும் மூவர் மீது நாடு கடத்தும் உத்தரவுகளை குடியேற்ற, அகதிகள் வாரியம் பிறப்பித்துள்ளது.
மேலும் ஏழு பேர் ஈரானிய ஆட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் அல்ல என குடியேற்ற, அகதிகள் வாரியம் கண்டறிந்தது.
ஒன்பது வழக்குகள் குடியேற்ற, அகதிகள் வாரியத்தின் பரிசீலனையில் உள்ளது.
இதற்கிடையில், மேலும் பத்து பேர் மீதான வழக்குகளை CBSA தயார் செய்து வருகிறது.
ஐம்பத்தைந்து பேர் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
2025-ஆம் ஆண்டில், முன்னெப்போதும் இல்லாத வகையில் 23,160 வெளிநாட்டுப் பிரஜைகள் கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
மேலும், CBSA தற்போது “வாரத்திற்கு ஏறக்குறைய 400 வெளியேற்ற உத்தரவுகளை செயல்படுத்தி வருகிறது” என செய்தித் தொடர்பாளர் கூறினார்.
