காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றுவதற்கு Ontario மாகாண அரசாங்கம் மத்திய அரசின் உதவியை கோருகிறது.
தொடர் காட்டுத்தீயால் பேரழிவுக்குள்ளான தொலைதூர வடக்குப் பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்காக Ontario அரசாங்கம் மத்திய அரசாங்கத்தின் உதவியை வியாழக்கிழமை (16) கோரியது.
வடக்கு Ontario-வில் நூற்றுக்கணக்கான காட்டுத்தீகள் பரவி வருவதால், மக்களை அங்கிருந்து வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் Ontario அரசாங்கம் கோரியுள்ள உதவிகள் தொடர்பாக மாகாண, உள்ளாட்சி நிர்வாகத்துடன் மத்திய அரசாங்கம் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக பிரதமர் Mark Carney கூறினார்.
காட்டுத்தீ Toronto பெரும்பாகம் உட்பட வடகிழக்கு அமெரிக்காவின் பெரும்பகுதிகளில் காற்றின் தரத்தை குறைத்து வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளின் July மாத மத்தியில் இருந்ததை விட, கனடாவில் தற்போது அதிக எண்ணிக்கையிலான காட்டுத்தீகள் எரிந்து கொண்டிருக்கின்றன.
மேலும், 2025-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், அதிக பரப்பளவு இம்முறை எரிந்துள்ளது.
இவற்றில் பெரும்பாலான காட்டுத்தீ Manitoba, Saskatchewan, Ontario ஆகிய மத்திய மாகாணங்களின் தொலைதூரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ளன.
வியாழக்கிழமை நிலவரத்தின்படி நாடு முழுவதும் சுமார் 859 காட்டுத்தீகள் தீவிரமாக எரிந்து கொண்டிருந்தன.
அரசாங்கத்தின் தகவலின்படி, 113 கட்டுப்பாட்டை மீறிய நிலையில் இருந்ததாக கருதப்பட்டன.
இதுவரை 2.384 மில்லியன் hectares (5.89 மில்லியன் acres) நிலப்பரப்பு எரிந்து போயுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்ட காட்டுத்தீ, கனடாவின் முதற்குடி சமூகங்களைப் பெருமளவில் பாதித்துள்ளது.
July 15 ஆம் நிலவரப்படி, இந்தப் பருவத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக முதற்குடியின சமூகங்களில் இருந்து 1,600 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக கனடாவின் முதற்குடியினர் சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
