கனடா எதிர்கொள்ளும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக ரஷ்யாவின் ஏவுகணை தொழில்நுட்பங்கள் அமைவதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடிய படைகளின் தலைமை அதிகாரி Gen. Jennie Carignan தொலைக்காட்சி செவ்வி ஒன்றின்போது இந்தத் தகவலை தெரிவித்தார்.
கனடா எதிர்காலத்தில் எதிர்கொள்ளும் முதன்மையான அச்சுறுத்தல் எது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ரஷ்யாவில் இருந்து வரும் புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஏவுகணைகளை சுட்டிக்காட்டினார்.
நீண்ட, நடுத்தர தூரம் பாய்ந்து செல்லும் ஏவுகணைகள் தொடர்பான தொழில்நுட்பத்தில் எமது எதிரிகள் கடந்த சில ஆண்டுகளில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளதை குறிப்பிட்ட Gen. Jennie Carignan, அந்த அச்சுறுத்தல்களில் இருந்து கனடாவை பாதுகாப்பதே இப்போது முக்கியமானது என கூறினார்.
இந்த அச்சுறுத்தல் தன்மையானது, கனடிய இராணுவம் இனிவரும் காலங்களில் தன்னை எவ்வாறு வடிவமைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்த ஒரு பரந்த மாற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளது எனவும் அவர் கூறினார்
குறிப்பாக Afghanistan போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் செயல்பாட்டுக் களங்களில் பங்கேற்பதில் இருந்து மாறி, கனடாவை பாதுகாப்பதில் கவனம் செலுத்தும் வகையிலான மாற்றமாக இது அமைந்துள்ளது எனவும் Gen. Jennie Carignan குறிப்பிட்டார்.
கனடாவின் அதிகரித்த பாதுகாப்பு செலவுகள், அந்த நிதியைக் கருத்தில் கொண்ட கனடிய இராணுவத்தின் தயார்நிலை, NORAD-இன் எதிர்காலம் குறித்தும் தனது நேர்காணலில் அவர் உரையாடினார்.
