ஈரான் அல்லது Venezuela-வில் தூதரகம் எதையும் திறக்க கனடாவுக்குத் தற்போது எந்தத் திட்டமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட சில நாடுகளுடனான இராஜதந்திரத் தொடர்புகள் இல்லாதது கனடாவை ஒரு “பாதகமான நிலையில்” வைப்பதாக பிரதமர் Mark Carney கூறிய மறுதினம் இந்த கருத்து வெளியானது.
தற்போதைய நிலையில் ஈரான் அல்லது Venezuela-வில் தூதரகம் ஒன்றைத் திறக்கும் திட்டம் எங்களிடம் இல்லை என கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் வெள்ளிக்கிழமை (26) தெரிவித்துள்ளார்.
ஈரானுடன் தூதரக உறவுகளை மீண்டும் ஏற்படுத்த அரசாங்கம் விரும்பவில்லை என்றாலும், தூதரக ரீதியான இருப்பு இல்லாதது கனடாவை “பாதகமான நிலையில்” வைப்பதாக Mark Carney கூறினார்.
ஒரு நாட்டில் தூதரகம் அல்லது தூதரக சேவைகளை வைத்திருப்பது, அந்த நாட்டின் கொள்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம் என பொருள்படாது என Mark Carney வியாழக்கிழமை (25) செய்தியாளர்களிடம் கூறினார்.
Venezuela நிலநடுக்கங்கள் குறித்து வியாழனன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த Mark Carney, அங்கு கனடிய தூதரக அதிகாரிகள் எவரும் இல்லாததால், அங்குள்ள கனடியர்களுக்கு உதவி வழங்குவது கடினமாக உள்ளதாக கூறினார்.
இந்த நிலையில் Venezuela-வில் உள்ள கனடியர்களுக்கு உதவ, அண்டை நாடான Colombia-வில் உள்ள தனது பணியாளர்களுடன் கனடிய அரசு இணைந்து பணியாற்றி வருவதாக அனிதா ஆனந்த் தெரிவித்தார்.
Venezuela-வில் 740 கனடியர்கள் தற்போது இருப்பதாக பதிவு செய்துள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்களுக்கு உதவ Colombia தூதரகத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் எனவும் அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார்.
ஈரான் அல்லது Venezuela-வில் தூதரகத்தைத் திறக்கும் திட்டம் எதுவும் இல்லையென்றாலும், கனடியர்களுக்கு எவ்வாறு சேவை செய்ய முடியும் என்பதற்கான வழிகளை தமது அரசாங்கம் எப்போதும் ஆராந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
