Toronto பெரும்பாகத்தில் மிரட்டி பணம் பறித்தலுடன் தொடர்புடைய சந்தேகத்தில் பலர் நாடு கடத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு இலையுதிர் காலத்தில் ஆரம்பித்த குடிவரவு அமுலாக்க வழக்குகளின் தீவிர கண்காணிப்பை தொடர்ந்து இந்த நாடு கடத்தல் நிலை சாத்தியமாகியுள்ளது.
மிரட்டி பணம் பறித்தலுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் Toronto பெரும்பாக பகுதியைச் சேர்ந்த பலருக்கு நாடு கடத்தல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கனடிய எல்லைச் சேவைகள் முகமையகம் (CBSA) தெரிவித்துள்ளது.
மிரட்டி பணம் பறிக்கும் செயல்களுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடிய அமுலாக்க நடவடிக்கைகளை, கடந்த ஆண்டு August மாதம் கனடாவின் மேற்கு பகுதிகளில் உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்ததாக CBSA தெரிவித்தது.
கடந்த November மாதத்தில், இந்த அணுகுமுறை Toronto பெரும்பாக பகுதிற்கும் விரிவுபடுத்தப்பட்டதாக CBSA ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்தது.
Toronto பகுதியில் 200 வரையிலான குடிவரவு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அவற்றை இருந்து 33 நாடு கடத்தல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
November 2025 நிலவரப்படி,Toronto பெரும்பாகத்தை சேர்ந்த 17 பேர் கனடாவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Toronto பெரும்பாக பகுதி முழுவதும் உள்ள காவல்துறையினர், மிரட்டி பணம் பறிக்கும் முயற்சிகள் அதிகரித்து வருவதாக தோன்றுவது குறித்துக் கவலை தெரிவித்துள்ளனர்.
தெற்காசிய வணிகச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முக்கிய இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட தொடர்ச்சியான வன்முறை, மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்பாக, 17 பேர் கைது செய்யப்பட்டதாக கடந்த May மாதத்தில் Peel பிராந்திய காவல்துறையினர் அறிவித்தனர்.
இந்த ஆண்டில் இதுவரை Peel பிராந்தியத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் சுமார் 50 சதவீதத்திற்கு இந்தக் குழுவே காரணம் என தாங்கள் நம்புவதாக அந்த நேரத்தில் காவல்துறை தெரிவித்தது.
இந்த நிலையில் Toronto பெரும்பாகத்திற்கு வெளியே 300 வரையிலான குடியேற்றம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக CBSA தகவல் வெளியிட்டது .
Pacific பிராந்தியத்தில் 150 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
69 நாடு கடத்தல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் 46 பேர் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Prairie பிராந்தியத்தில் 138 குடியேற்றச் சட்ட அமுலாக்க விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 37 நாடு கடத்தல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு 18 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் CBSA தெரிவித்துள்ளது.
மிரட்டி பணம் பறித்தல் போன்ற, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சர்வதேச குற்ற அச்சுறுத்தல்களை முறியடிப்பதில் தமது அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என மத்திய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
