நாடாளுமன்ற நடைமுறைகளுக்கு பிரதமர் அளித்துள்ள உறுதிப்பாட்டை அரசாங்க அவைத் தலைவர் Steven MacKinnon ஆதரித்து கருத்து தெரிவித்தார்.
இந்த ஆண்டு சபை அமர்வுகள் கேள்வி நேரத்தின்போது Mark Carney கலந்து கொள்ளாததை Conservative கட்சியினர் சுட்டிக்காட்டி வரும் நிலையில் இந்த கருத்து வெளியானது.
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை (16) Mark Carney தவறவிட்ட 100-வது கேள்வி நேரத்தை குறிக்கும் வகையில், Conservative கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினர்.
இந்த 100 நாட்களில் Mark Carney 64 நாட்கள் தலைநகர் Ottawa-வில் இருந்தார் என Conservative கட்சியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் “பிரதமருக்கு நாடாளுமன்றத்தின் மீது ஆழ்ந்த மரியாதை உண்டு,” என ஞாயிற்றுக்கிழமை (21) ஒளிபரப்பான ஒரு தொலைக்காட்சி பேட்டியில் Steven MacKinnon வலியுறுத்தினார்.
பிரதமர் தவறவிடும் நாடாளுமன்ற கேள்வி நேரங்களில் எண்ணிக்கை, நாடாளுமன்றத்தின் செயல்பாடு குறித்த அவரது பார்வைகளைப் பிரதிபலிக்கின்றனவா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் இந்தக் கருத்தை அரசாங்க அவைத் தலைவர் முன்வைத்தார்.
கடந்த வாரம் Mark Carney கலந்துகொண்ட G7 தலைவர்கள் உச்சி மாநாடு உள்ளிட்ட பிரதமரின் சர்வதேசப் பொறுப்புகளை Steven MacKinnon சுட்டிக்காட்டினார்.
பிரதமரின் நிகழ்ச்சி நிரலில் சபை அமர்வுகள் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும் என கூறிய Steven MacKinnon, அது தொடர்ந்து அவ்வாறே இருக்கும் என வலியுறுத்தினார்.
முன்னாள் பிரதமர் Stephen Harper சபை அமர்வுகள் கேள்வி நேரத்தின்போது கலந்து கொள்ளாதது குறித்து அப்போதைய Liberal கட்சித் தலைவர் Justin Trudeau முன்வைத்த விமர்சனம் குறித்தும், அதே காரணத்திற்காக கட்சி இப்போது தற்போதைய பிரதமரை ஏன் ஆதரிக்கிறது என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த Steven MacKinnon, பிரதமர் Mark Carney அனைத்து தரப்பினராலும் மிகவும் எளிதில் அணுகக்கூடிய ஒரு பிரதமர் என வலியுறுத்தினார்.
சபையில் உள்ளவர்கள் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஊடகங்களுக்கும் Mark Carney இலகுவில் அணுகக்கூடிய ஒருவராக உள்ளார் என அவைத் தலைவர் கூறினார்.
பிரதமர் ஒவ்வொரு வாரமும் சபையில் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் எனவும் Steven MacKinnon கூறினார்.
