கனடிய மத்திய வங்கி தொடர்ந்து ஐந்தாவது முறையாக முக்கிய வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்துள்ளது.
புதன்கிழமை (10) மத்திய வங்கியின் வட்டி விகித அறிவித்தல் வெளியானது.
உலகளாவிய நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் ஒரு பொருளாதார பாதையை வகுக்க முயற்சிக்கும் கனடிய வங்கி, தனது அடிப்படை வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்துள்ளது.
மத்திய வங்கியின் கொள்கை வட்டி விகிதம், தொடர்ந்து ஐந்தாவது முறையாக மாற்றமின்றி 2.25 சதவீதமாக நீடிக்கிறது.
ஐந்தாவது முறையாக வட்டி விகிதம் மாற்றமின்றி இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் முன்னர் எதிர்பார்த்திருந்தனர்.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட மந்தமாக இருந்ததாக கனடிய மத்திய வங்கியின் ஆளுநர் Tiff Macklem புதன்கிழமை கூறினார்.
ஈரான் யுத்தத்தினால் எரிசக்தி விலைகளில் ஏற்படும் தாக்கங்களையும் , கனடா-அமெரிக்கா-மெக்சிகோ ஒப்பந்தத்தின் வரவிருக்கும் ஆய்வு முடிவுகளையும் மத்திய வங்கி கண்காணித்து வருவதால், பணவியல் கொள்கை நெகிழ்வாக இருக்க வேண்டியிருக்கும் என அவர் முன்னர் கூறியிருந்தார்.
ஈரான் யுத்தம் காரணமாக ஏற்பட்ட எரிவாயு விலை உயர்வு, April மாதத்தில் வருடாந்த பணவீக்க விகிதத்தை 2.8 சதவீதமாக உயர்த்தியது.
April மாதத்தில் 6.9 சதவீதமாக இருந்த நாடளாவிய வேலையற்றோர் விகிதம், May மாதத்தில் 6.6 சதவீதமாக குறைந்துள்ளதாக கடந்த வாரம் கனடிய புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
