Ontario மாகாண கல்வி தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முறைப்படியான அறிவிப்பை வெளியிட்டன.
Ontario மாகாணத்தின் பிரதான கல்விச் சங்கங்கள், பேச்சுவார்த்தை முன்னெடுப்பதற்கான அறிவிப்பை Doug Ford அரசாங்கத்திற்கு அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளன.
மாகாணம் முழுவதும் 255,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், கல்வி பணியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் புதன்கிழமை (03) இந்த நடவடிக்கையை அறிவித்தன.
இந்த முறையான சட்ட அறிவிப்பின் மூலம், கல்வித்துறையில் பேச்சுவார்த்தை 15 நாட்களுக்குள் ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இது எதிர்வரும் இலையுதிர் காலத்தில் ஆரம்பிக்கக்கூடிய தொழிலாளர் போராட்டத்திற்கு வழிவகுக்கிறது.
August 31 அன்று கூட்டு ஒப்பந்தங்கள் காலாவதியாவதற்கு முன்னதாக, கல்வி அமைச்சர் Paul Calandra பேச்சுவார்த்தை மேசையில் சந்திக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் இரு தரப்பினரும் “எந்தவித இடையூறும் இன்றி” ஒரு உடன்பாட்டை எட்டுவார்கள் என்பதில் தான் நம்பிக்கையுடன் இருப்பதாக அமைச்சர் செவ்வாய்கிழமை (02) செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
புதன்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில், அமைச்சரின் செய்தி தொடர்பாளர் Emma Testani அதே நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
