ஈரான் யுத்தம் காரணமாக மத்திய கிழக்கில் சிக்கியிருந்த கனடியர்கள் மீண்டும் கனடாவை வந்தடைய ஆரம்பித்துள்ளனர்.
கனடிய அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விமானங்களில் இவர்கள் மீண்டும் கனடா திரும்புகின்றனர்.
துபாயிலிருந்து திரும்பிய முதல் கனடியர்கள் வியாழக்கிழமை (05) காலை Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையே அதிகரித்து வரும் பதட்டங்களால் தூண்டப்பட்டு, வளைகுடா பிராந்தியத்தில் பல நாட்கள் பயண இடையூறுகளுக்கு பின்னர் இவர்கள் மீண்டும் கனடா திரும்பினர்.
அந்தப் பிராந்தியத்தில் உள்ள கனடியர்களுக்கு உதவும் பணியில் சர்வதேச பங்காளிகளுடன் மத்திய அரசு ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் வியாழக்கிழமை தெரிவித்தார்.
கனடியர்களை ஆபத்திலிருந்து மீட்க உதவுவதற்காக எங்கள் சர்வதேச கூட்டாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாக அவர் கூறினார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் போரின் அடுத்த கட்டத்திற்கு’ நகரும் நிலையில், மத்திய கிழக்கை விட்டு வெளியேற சுமார் 2,000 கனடியர்கள் கனடிய அரசாங்கத்தின் உதவியை நாடியுள்ளனர்.
அந்தப் பகுதியில் 107,000-க்கும் மேற்பட்ட கனடியர்கள் உள்ளதாக வெளிவிவகார அமைச்சில் பதிவாகியுள்ளது.
