அமெரிக்க வரிகளை எதிர்கொள்ளும் கனடிய மத்திய அரசின் பதில் நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் உரையாடினார்.
அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் முறிந்த நிலையில், கனடாவின் ஒன்றுபட்ட அணுகு முறையை வலியுறுத்தும் வகையில் Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre, Bloc Québécois கட்சித் தலைவர் Yves-François Blanchet, NDP தலைவர் Avi Lewis உள்ளிட்ட மத்திய எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பிரதமர் Mark Carney தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டார்.
கனடாவின் பதில் நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கு விளக்கமளிப்பதற்காகப் பிரதமர் அலுவலகம் மேற்கொண்டுள்ள விரிவான அணுகுமுறையின் ஒரு பகுதியாக இந்த உரையாடல்கள் அமைந்தன.
பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் செவ்வாய்க்கிழமை (25) நிகழ்ந்த இந்த தொலைபேசி உரையாடல்கள் குறித்த விபரங்கள் வெளியாகின.
அமெரிக்காவின் வரிகளினால் கனடியத் தொழிலாளர்கள், குடும்பங்கள், வணிகங்களுக்கு ஆதரவு வழங்கும் கனடிய அரசின் புதிய நடவடிக்கைகள் உட்பட்ட விடயங்கள் இந்த உரையாடலில் பேசப்பட்டன.
வேலை வாய்ப்புகளைப் பாதுகாக்கவும், பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், கனடாவின் நலன்களுக்காக குரல் கொடுக்கவும் தனது அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்து பிரதமரும் எதிர்க்கட்சி தலைவர்களும் விவாதித்தனர் என அந்த அறிக்கை தெரிவித்தது.
பிரதமருடனான தொலைபேசி உரையாடலை Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre உறுதிப்படுத்தினார்.
தீவிரமடைந்து வரும் வர்த்தக சவால்கள் குறித்து இருவரும் உரையாடியதாக Pierre Poilievre தெரிவித்தார்.
பிரதமரிடம் தான் விடுத்ததாக கூறிய பல கோரிக்கைகளை சமூக ஊடகப் பதிவு ஒன்றில் Pierre Poilievre விவரித்திருந்தார்.
நிராகரிக்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின் விபங்களை வெளியிடுதல், நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது ஆகியவை இதில் அடங்குகின்றன.
இந்த சவாலான காலத்தில் அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட தயாராகி உள்ளதாகவும் Pierre Poilievre தெரிவித்தார்.
பிரதமருடன் வர்த்தகப் பின்னடைவுகள் குறித்தும் வழங்கல் மேலாண்மை நிலைப்பாடுகள் குறித்து விவாதித்ததாக Yves-François Blanchet தனது உரையாடல் குறித்து தெரிவித்தார்.
கனடியத் தொழிலாளர்களுக்கு மேலதிக பாதுகாப்புகளை வழங்குமாறு பிரதமருடான உரையாடலில் NDP தலைவர் Avi Lewis வலியுறுத்தினார்.
ஒரு மோசமான ஒப்பந்தத்திலிருந்து கனடா விலகுவதற்கு NDP அளிக்கும் ஆதரவை இந்தத் தொலைபேசி உரையாடலில் தான் மீண்டும் வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார்.
