அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் காவல்துறையினரிடம் இருந்து தப்பிய விபரம் வெளியானது.
Toronto நகர மையத்தில் அமைந்துள்ள அமெரிக்க துணைத் தூதரகம் மீது திங்கட்கிழமை (27) அதிகாலையில் மீண்டும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தத் துப்பாக்கி சூட்டுக்கு காரணமான வாகனத்தை பாதுகாப்பு காரணங்களுக்காக துரத்துவதை காவல்துறை கைவிட்டனர் என்ற தகவல் வெளியானது.
சந்தேக நபரின் வாகனத்தின் வேகம் மணிக்கு 140 KM வரை எட்டியதை அடுத்து காவல்துறை அந்த வாகனத்தை துரத்துவதை கைவிட்டது.
பொதுமக்கள் பாதுகாப்பு அச்சம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதில் சந்தேகத்திற்குரிய வாகனத்தை 52-வது பிரிவைச் சேர்ந்த காவல்துறையினர் Don Valley Parkway நெடுந்தெருவில் பின்தொடர்ந்தனர்.
குறிப்பிட்ட வாகனத்தின் வேகம் அதிகரிக்க, பாதுகாப்பு குறித்த அச்சங்கள் காரணமாக அதை பின்தொடரும் முடிவை காவல்துறையினர் கைவிட்டனர்.
அந்த நேரத்தில் குறிப்பிட்ட சந்தேக வாகனத்தை வான்வழியாக பின்தொடர்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் தெரியவருகிறது.
குறிப்பிட்ட சம்பவத்தில் துணைத் தூதரக கட்டிடத்தின் மீது ஒரு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், அதனால் தூதரகத்தின் முன் பகுதி சேதமடைந்ததாகவும் காவல்துறையினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
இதில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
முன்னதாக March 10-ஆம் திகதி அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
அதற்கு பொறுப்பான அதே குழுவுக்கும் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதா என்ற கேள்விக்கு காவல்துறையினர் உறுதியாக பதிலளிக்கவில்லை.
March 10 துப்பாக்கி சூட்டுச் சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் முன்னதாக உறுதிப்படுத்தி இருந்தனர்.
