WestJet நிறுவனம் தனது விமானங்களை தரையிறக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
விமானப் பணியாளர்கள் வேலை நிறுத்த சாத்தியக் கூற்றின் மத்தியில் WestJet நிறுவனம் தனது விமானங்களை தரையிறக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
விமானப் பணியாளர்களுக்கான ஊதியம் தொடர்பான விவகாரம், கனடிய பொது ஊழியர்கள் சங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் ஒரு முக்கிய முட்டுக்கட்டையாக தொடரும் நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
இந்த நிலையில் விமான நிலையத்திற்கு புறப்படுவதற்கு முன்னர் பயணிகள் தங்கள் விமான பயணத்தின் நிலையை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்,
சாத்தியமான பணி நிறுத்தத்திற்கு முன்னதாகவே விமான நிறுவனங்கள் விமான பயணங்களை இரத்து செய்வது வழக்கமாகும்.
புதிய ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கான நம்பிக்கையுடன், 4,400 விமானப் பணியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கனடிய பொது ஊழியர் சங்கத்துடன் (CUPE) தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக WestJet நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (02) காலைக்குள் ஒரு ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், இரு தரப்பிலும் எவரேனும் ஒருவர் பணி நிறுத்தத்தை ஆரம்பிக்கும் சாத்தியக்கூறு உள்ளது.
இது ஒரு நீண்ட வார இறுதியில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் இரத்து செய்யப்படுவதற்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவின் இரண்டாவது பெரிய விமான நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள Calgary நகரில், ஞாயிறு நள்ளிரவுக்குப் பின்னர் முடிவடையும் 72 மணி நேர வேலை நிறுத்த அறிவிப்பை CUPE வெளியிட்டது.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, WestJet அதே காலக்கெடுவுக்குள் கதவடைப்பு அறிவிப்பை வெளியிட்டது.
