அதிகரித்து வரும் அமெரிக்காவுடனான வர்த்தகப் போரின் மத்தியில் “எங்கள் குடும்பங்கள், தொழிலாளர்கள், வணிகங்களை பாதுகாக்கவும் ஆதரிக்கவும் தேவையான அனைத்தையும்” செய்யத் தயாராக உள்ளதாக பிரதமர் Mark Carney தெரிவித்தார்.
கனடாவுக்கு எதிரான தனது வர்த்தக போரை மேலும் தீவிரப்படுத்தும் நடவடிக்கையாக, கனடாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களின் மீது 50 சதவீத வரி விதிக்கும் மூன்று அறிவிப்பாணைகளில் Donald Trump இந்த வாரத்தின் ஆரம்பத்தில் கையெழுத்திட்டார்.
இந்த நிலையில் மாகாண, பிராந்தியத் தலைவர்களின் வருடாந்த கூட்டத்தின் இறுதி நாளான வியாழக்கிழமை (23) கனடாவின் முதல்வர்களை Mark Carney சந்தித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி Donald Trump அறிவித்துள்ள கனடியப் பொருட்கள் மீதான மேலதிக வரிகள் குறித்த அச்சுறுத்தல்கள் தொடர்ந்து முக்கியத்துவம் பெற்று வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
“18 மாதங்களுக்கு முன்னர் இந்த வர்த்தக யுத்தம் ஆரம்பித்தபோது இருந்த நிலையை விட, நாங்கள் இப்போது வலுவான நிலையில் உள்ளோம் ” என முதல்வர்களுடன் நடத்திய நான்கு மணி நேர சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய Mark Carney கூறினார்.
கனடியர்களின் உறுதியான மனப்பான்மை, மாகாண முதல்வர்கள் கவனம் ஆகியவற்றின் காரணமாக கனடா வலுவான நிலையில் உள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை பொறுத்தவரை, புதிய வரிவிதிப்புகள் அமுலுக்கு வருவதற்குள் ஓர் ஒப்பந்தம் எட்டப்படா விட்டால், “அனைத்து தெரிவுகளும் பரிசீலனைக்கு உட்பட்டிருக்கும்” எனவும் Mark Carney கூறினார்.
வரிகள் தொடர்பான அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான ஒப்பந்தத்தை எட்டுவதற்காக, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
