கனடாவில் பதிவான மத ரீதியான வெறுப்புக்கு எதிரான குற்றங்களில் 71 சதவீதத்தில் யூதர்கள் குறிவைக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கனடாவில் வெறுப்புணர்வால் தூண்டப்பட்ட குற்றங்கள் கடந்த ஆண்டு குறைந்துள்ளன.
2018-ஆம் ஆண்டின் பின்னர் வெறுப்புணர்வால் தூண்டப்பட்ட குற்றங்கள் முதல் முறையாக குறைந்துள்ளதாக கனடிய புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது .
2025-இல் 4,708 வெறுப்புணர்வு குற்றங்கள் பதிவானதாக காவல்துறை தெரிவித்தது.
இது முந்தைய ஆண்டில் இருந்த 4,841 என்ற எண்ணிக்கையில் இருந்து மூன்று சதவீதம் குறைவானது என கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் புதன்கிழமை (22) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
2018 முதல் 2024 வரையிலான காலத்தில் தேசிய அளவிலான எண்ணிக்கையை இரு மடங்கிற்கு அதிகமாக உயர்த்திய, தொடர்ந்து ஆறு ஆண்டுகள் நீடித்த அதிகரிப்புக்கு பின்னர் இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது.
மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில், இந்த விகிதம் நான்கு சதவீதம் குறைந்து, ஒரு லட்சம் பேருக்கு 11 சம்பவங்களாக உள்ளது.
இது 2018-ஆம் ஆண்டின் விகிதத்தை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமாகும்.
மதத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்ட வெறுப்புக் குற்றங்கள் 18 சதவீதம் குறைந்து, 1,115 சம்பவங்களாக பதிவாகியுள்ளன.
கடந்த ஆண்டு காவல்துறையில் பதிவான 788 சம்பவங்களில் யூதர்கள் குறி வைக்கப்பட்டனர்.
இது முந்தைய ஆண்டை விட 16 சதவீதம் குறைவானாலும், மதம் சார்ந்த அனைத்து சம்பவங்களிலும் இது 71 சதவீதமாக உள்ளது.
மதத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்ட யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் எண்ணிக்கை 2021-ஆம் ஆண்டை விட 60 சதவீதம் அதிகமானதாகும்.
கடந்த ஆண்டில் மதத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்ட குற்றங்களில் 204 சம்பவங்களில் முஸ்லிம்களும், 36 சம்பவங்களில் கத்தோலிக்கர்களும், 71 சம்பவங்களில் பிற மதத்தினரும் குறி வைக்கப்பட்டனர்.
கனடாவில் உள்ள யூதர்கள் மொத்த மக்கள் தொகையில் சுமார் ஒரு சதவீதத்தினர் மட்டுமே என்றாலும், அனைத்து வெறுப்புணர்வு குற்றச் சம்பவங்களில் 16 சதவீதத்திற்கும் அதிகமானவை அவர்களை இலக்காகக் கொண்டே நிகழ்ந்துள்ளன.
2,391 வெறுப்புக் குற்றச் சம்பவங்களுடன், இனம் அல்லது இனக்குழு சார்ந்த பிரிவு மிகப்பெரிய பிரிவாகத் தொடர்ந்தது.
858 சம்பவங்களில் கறுப்பின மக்கள் குறிவைக்கப்பட்டனர்.
தெற்காசியர்களை இலக்காகக் கொண்ட தாக்குதல்கள் 49 சதவீதம் அதிகரித்து 483 ஆக உயர்ந்துள்ளன.
இந்த அதிகரிப்பு Ontario , British Columbia மாகாணங்களில் செறிவடைத்திருந்ததாகவும் ஏனைய பெரும்பாலான இனக்குழுக்களின் சரிவுப் போக்கிற்கு எதிராக இது இருந்ததாகவும் புள்ளி விபரத் திணைக்களம் தனது அறிக்கையில் கூறியது.
