நான்கு மாகாணங்களின் ஏழு நாடாளுமன்ற தொகுதிகளில் விரைவில் இடைத் தேர்தல்கள் நடைபெற வேண்டிய நிலை உள்ளது.
பல்வேறு காரணங்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகும் நிலையில் இந்த ஏழு தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் எதிர்வரும் மாதங்களில் இடைத் தேர்தல்களில் புதிய பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
நான்கு முக்கிய கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தூதரகப் பதவிகள், ஓய்வு, மாகாண தேர்தல்கள் போன்றவற்றில் ஆர்வம் செலுத்தும் நிலையில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இந்த பதவி விலகல்கள் Quebec, Ontario, British Colombia, Saskatchewan ஆகிய நான்கு மாகாணங்களில் இடைத் தேர்தல்களுக்கு வழிவகுக்கிறது.
Québec மாகாணத்தின் Chicoutimi-Le Fjord, Rosemont-La Petite-Patrie, Saint-Hyacinthe-Bagot-Acton, Laurier-Sainte-Marie தொகுதிகள், Ontario மாகாணத்தின் Beaches-East York, British Colombia மாகாணத்தின் North Vancouver-Capilano, Saskatchewan மாகாணத்தின் Yorkton-Melville ஆகிய தொகுதியில் இந்தத் தேர்தல்கள் நடைபெற வேண்டிய நிலையை தோற்றுவித்துள்ளது.
இந்தத் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இதுவரை பதவி விலகவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, நாடாளுமன்ற தொகுதி வெற்றிடமான பின்னர், அந்த உறுப்பினர் பதவி விலகியதிலிருந்து 11 முதல் 180 நாட்களுக்குள் பிரதமர் தேர்தலை நடத்த வேண்டும்.
ஒரு இடைத் தேர்தல் 36 நாட்கள் என்ற குறுகிய காலத்திலோ அல்லது 50 நாட்கள் என்ற நீண்ட காலத்திலோ நடைபெறலாம்.
இது ஒரு தொகுதி வெற்றிடமான பின்னர், 47 நாட்கள் முதல் ஏழு மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் வாக்கெடுப்பு திகதியை நிர்ணயிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
