கனடாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளாதார உறவு “முக்கியமானது” என கனடிய வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார்.
சீனாவின் வெளியுறவு அமைச்சர் Wang Yi மூன்று நாள் கனடிய பயணத்தை வெள்ளிக்கிழமை (29) ஆரம்பித்தார்.
பத்தாண்டுகளில் முதல் முறையாக நடைபெறும் இத்தகைய பயணம் இதுவாகும்.
வெள்ளி காலை கனடிய வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்தை Wang Yi சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது சீனாவுடனான உறவுகளை வலுப்படுத்த கனடா உறுதிபூண்டுள்ளதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சரிடம் அனிதா ஆனந்த் தெரிவித்தார்.
இதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்களை சந்தித்தபோது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவு குறித்து அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
கனடாவின் பொருளாதார, தேசியப் பாதுகாப்பு நலன்களையும் விழுமியங்களையும் பேணிக்காக்கும் அதே வேளையில், 2030-ஆம் ஆண்டுக்குள் சீனாவுக்கான ஏற்றுமதியை 50 சதவீதம் அதிகரிக்க கனடா இலக்கு கொண்டுள்ளது என அனிதா ஆனந்த் கூறினார்.
கனடா தனது பொருளாதாரத்தை வளர்ப்பதிலும், வர்த்தக உறவுகளைப் பன்முகப்படுத்துவதிலும் கவனம் செலுத்துவதாகவும், கனடா-சீனா உறவை “பொறுப்புடன்” கையாளும் எனவும் அனிதா ஆனந்த் கூறினார்.
இரு நாடுகளுமான உறவு நீடித்தால், கனடா தனது வர்த்தக இலக்கைத் தாண்டி, சீனாவுக்கான ஏற்றுமதியை இரட்டிப்பாக்க முடியும் என Wang Yi தெரிவித்தார்.
சீனா விரைவில் உலகின் மிகப்பெரிய சந்தையாக உருவெடுக்கும் என கூறிய அவர், அது கனடாவுடன் வர்த்தகத்திற்கு தயாராக உள்ளதாகவும் கூறினார்.
இந்த நிகழ்வில் கேள்விகள் எதையும் கேட்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
10 ஆண்டுகளுக்கு முன்னர் சீன வெளியுறவு அமைச்சர் கனடிய வெளியுறவு அமைச்சருடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில், சீனாவில் மனித உரிமைகள் குறித்து கேள்வி எழுப்பிய ஒரு கனடிய நிருபரை Wang Yi கடுமையாக சாடியிருந்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அனிதா ஆனந்த் சீனாவின் மனித உரிமைகள் குறித்து வெளிப்படையாக எதையும் குறிப்பிடவில்லை.
வெள்ளி மாலை Wang Yi கனடிய பிரதமரை சந்திக்க ஏற்பாடாகியுள்ளது.
ஒரு கனடிய யுத்தக் கப்பல் Taiwan நீரினை வழியாக சென்ற சில நாட்களுக்குப் பின்னர் சீன வெளிவிவகார அமைரின் இந்த கனடிய பயணம் நிகழ்கிறது இங்கு குறிப்பிடத்தக்கது.
