பாலஸ்தீன ஆதரவு Al-Quds தின பேரணி திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
Ontario முதல்வர் Doug Ford இந்தப் பேரணியை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்த போதிலும் அது வெற்றியடையவில்லை என தெரியவருகின்றது.
Al-Quds தின பேரணி சனிக்கிழமை (14) Toronto நகர மையப் பகுதியில் நடைபெற ஏற்பாடானது.
மத்திய கிழக்கில் நிலவும் மோதலைக் கண்டித்து Toronto அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடி பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
இந்தப் பேரணியை நிறுத்த ஒரு தடை உத்தரவை பெற முதல்வர் Doug Ford தனது முதன்மை வழக்கறிஞரை அறிவுறுத்தியதாக வியாழக்கிழமை (12) கூறினார்.
இந்தப் பேரணியை யூத எதிர்ப்புக்கான ஒரு களம் என அவர் விமர்சித்தார்.

வன்முறையை மகிமைப்படுத்துகின்ற, பயங்கரவாதத்தைக் கொண்டாடுகின்றஇது போன்ற நிகழ்வுகளுக்கு Ontarioவிலும் கனடாவிலும் இடமில்லை என Doug Ford கூறினார்.
எமது சமூகங்களைப் பாதுகாக்க எம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டிய பொறுப்பு எமது அரசாங்கத்திற்கு உள்ளது என்வும் அவர் தெரிவித்தார்.
ஆனாலும் இந்தப் பேரணி திட்டமிட்டபடி நடைபெறும் என ஏற்பாட்டாளர்களின் சட்ட ஆலோசகர் கூறினார்.
இதில் மாகாணம் தடை உத்தரவை பெறுவதில் வெற்றி பெறாது எனத் தெரிவித்த அவர், பேரணி திட்டமிட்டபடி தொடரும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக கூறினார்.
முந்தைய ஆண்டுகளை போலவே சனிக்கிழமை பேரணி அமைதியாக இருக்கும் எனவும் அவர் மேலும் கூறினார்.
1979 இஸ்லாமிய புரட்சியின் போது ஈரானில் பாலஸ்தீன ஆதரவு பேரணியாக Al-Quds தின பேரணி ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.
