குவைத்தில் உள்ள கனடிய விமானப்படை தளத்தின் மீதான ஈரானிய ஏவுகணை தாக்குதல் குறித்து கனடியர்களுக்கு தெரிவிக்கப்படாதது ஏன் என எதிர்க்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
March 1-ஆம் திகதி குவைத்தில் உள்ள கனடிய விமானப்படை தளத்தின் மீது ஈரானிய ஏவுகணை தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக La Presse பத்திரிகை வியாழக்கிழமை செய்தி வெளியிட்டது.
இந்தத் தகவல் 11 நாட்களுக்கு மேல் கனடியர்களுக்கு அரசாங்கத்தினால் மறைக்கப்பட்டிருப்பது அரசாங்க தகவல் தொடர்பு, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் தோல்வியாகும் என Conservative பாதுகாப்பு விமர்சகர் James Bezan கூறினார்.
கனடிய விமானப்படை தளம் ஏவுகணையால் தாக்கப்பட்டது குறித்த கனடிய அரசின் மௌனம் வெட்கக் கேடானது என அவர் தெரிவித்தார்.
இந்தப் போரினால் கனடா எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை கனடியர்களுடன் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளாததன் உதாரணம் இது எனவும் James Bezan கூறினார்.
பிரதமர் Mark Carney மீது அவர் நேரடியாக விமர்சனத்தை முன்வைத்தார்.
குவைத்தில் உள்ள Ali Al-salem விமானப்படை தளத்தின் கனடியப் பகுதி ஈரானிய ஏவுகணையால் சேதமடைந்ததாகத் தெரியவருகிறது,
இந்தத் தாக்குதலில் கனடிய வீரர்கள் எவருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
இதனை கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் உறுதிப்படுத்தினார்.
ஈரான் போர் குறித்து திங்கட்கிழமை (09) இரவு நாடாளுமன்றத்தில் Liberal அரசாங்கம் ஒரு விவாதத்திற்கு அழைப்பு விடுத்தது.
ஆனால் குவைத்தில் உள்ள கனடிய விமானப்படைத் தளத்திற்கு ஏற்பட்ட தாக்குதலையோ அல்லது சேதத்தையோ அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை.
கனடா மத்திய கிழக்கில் ஆறு வெவ்வேறு இடங்களில் சுமார் 200 இராணுவ வீரர்களைக் கொண்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
