பாலஸ்தீன ஆதரவு பேரணி ஒன்று Toronto நகர மையப் பகுதியில் நடைபெறவுள்ளது.
Al-Quds தின பேரணி சனிக்கிழமை (14) நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
1979 இஸ்லாமிய புரட்சியின் போது ஈரானில் பாலஸ்தீன ஆதரவு பேரணியாக Al-Quds தின பேரணி ஆரம்பமானது.
February 28 ஆரம்பித்த ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல் இரண்டு வாரங்களாக தொடரும் நிலையில் இந்த வார இறுதி பேரணி Toronto நகர மையப் பகுதியில் நடைபெறுகிறது.
மத்திய கிழக்கில் நிலவும் மோதலைக் கண்டித்து Toronto அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க துணைத் தூதரக கட்டிடத்தின் மீது செவ்வாய்க்கிழமை (10) காலை இரண்டு சந்தேக நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதை தொடர்ந்து, தூதரகத்தை சுற்றி தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வார விடுமுறையில் திட்டமிடப்பட்ட இந்தப் பேரணியின் போது தமது அதிகாரிகள் பிரசன்னத்தை எதிர்பார்க்கலாம் என Toronto காவல்துறையினர் தெரிவித்தனர்.
பொது மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வது, வன்முறையை தடுப்பது, சட்டத்தை நிலைநிறுத்துவதில் எங்கள் கவனம் இருக்கும் என Toronto காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இஸ்ரேலுக்கு எதிரான இந்த பேரணியை யூத குழுக்கள் கண்டித்துள்ளன,
இதை யூத எதிர்ப்பு என கூறி, அது நடக்காமல் தடுக்க அவர்கள் அதிகாரிகளை வலியுறுத்தினர்.
