கனடா தனித்துவத்துடனும் சுதந்திரத்துடனும் இயங்க வேண்டும் என கனடாவின் எதிர்க்கட்சித் தலைவர் Pierre Poilievre வலியுறுத்தினார்.
கனடாவுக்கு ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகள் குறித்து விவாதிக்கப்படும் இந்தச் சூழலில் எதிர்க்கட்சித் தலைவரின் இந்தக் கருத்து வெளியானது.
கனடா முற்றிலும் தனித்துவத்துடனும் சுதந்திரத்துடனும் இயங்க வேண்டும் எனத் தெரிவித்த Pierre Poilievre, ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிகளோ, சட்டங்களோ, குடியேற்றக் கொள்கைகளோ கனடியர்கள் மீது திணிக்கப்பட கூடாது எனவும் எச்சரித்தார்.
கனடாவை தங்களது முதலாவது இணை உறுப்பினராக மாற்ற விரும்புவதாகத் தனது வருடாந்த உரையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையத் தலைவர் Ursula von der Leyen அறிவித்தார்.
பிரதமர் Mark Carney இது ஒரு “தனித்துவமான கூட்டணி” என செவ்வாய்க்கிழமை (15) குறிப்பிட்ட நிலையில், புதன்கிழமை (15) Ursula von der Leyen இதை “இணை உறுப்பினர் அந்தஸ்து” என மாற்றிக் கூறியுள்ளதை Pierre Poilievre சுட்டிக்காட்டியுள்ளார்
இந்த ஒப்பந்தத்தின் உண்மையான தன்மையை கனடிய பிரதமரினால் சரியாக விளக்க முடியவில்லை என தனது பங்கிற்கு Pierre Poilievre குற்றம் சாட்டியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான கனடாவின் பல தசாப்த கால பாரம்பரிய வர்த்தக ஒப்பந்தங்களுக்கும், NATO பாதுகாப்பு அமைப்பிற்கும் Conservative கட்சி எப்போதும் முழு ஆதரவு அளிக்கும் என Pierre Poilievre தெளிவுபடுத்தியுள்ளார்.
எனினும், புதிய ஒப்பந்தத்தின் மூலம் கனடாவின் இறையாண்மை அடகு வைக்கப்படுவதை ஏற்க முடியாது என அவர் வாதாடியுள்ளார்.
ஆனாலும் இணை உறுப்பினர் என்ற விடயம் இன்னும் அதிகாரப்பூர்வ நிலையை எட்டவில்லை என ஐரோப்பிய ஒன்றியத்திற்கான கனடாவின் தூதர் Jonathan Wilkinson விளக்கமளித்துள்ளார்.
ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் Mark Carney, வியாழக்கிழமை ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அதிகாரப்பூர்வமாக உரையாற்றவுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
