கனடா எல்லை சேவைகள் முகமையகத்தின் (CBSA) தானியங்கி பரிசோதனை முனையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கனடிய விமான நிலையங்களில் தாமதங்கள் எதிர் கொள்ளப்பட்டது.
கனடாவின் மிகப்பெரிய விமான நிலையமான Toronto Pearson சர்வதேச விமான நிலையம், Montréal Trudeau விமான நிலையம் உள்ளிட்ட 11 சர்வதேச விமான நிலையங்களில் இந்தத் தொழில்நுட்ப முடக்கம் ஏற்பட்டது.
இந்தத் தொழில்நுட்ப முடக்கம் குறித்த விவரங்கள் வெள்ளிக்கிழமை (11) இரவு அதிகாரப்பூர்வமாக வெளியாக ஆரம்பித்தன.
CBSA கணினியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், சர்வதேச பயணிகள் தங்களது ஆவணங்களை சரிபார்க்கும் தானியங்கி இயந்திரங்கள் முற்றிலும் செயலிழந்தன.
சில விமானங்கள் தரை இறங்கிய பின்னரும், விமான நிலைய வளாகத்திற்குள் இடநெருக்கடி ஏற்பட்டதால் பயணிகள் விமானங்களுக்கு உள்ளேயே நீண்ட நேரம் காத்திருக்க வைக்கப்பட்டனர்.
தானியங்கி முனையங்கள் செயல்படாததால், எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் பயணிகளின் ஆவணங்களை கைமுறையாக சரிபார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதனால் பயணிகள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.
வாரயிறுதி ஆரம்பிக்கும் நேரத்தில் இந்த முடக்கம் ஏற்பட்டுள்ளதால் விமான நிலையத்தில் நீண்ட காத்திருப்பு நேரம் எதிர் கொள்ளப்பட்டது.
தற்போது இந்த தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், விமான நிலையங்களில் பயணிகளுக்குத் தாமதம் ஏற்படலாம் எனத் தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் செயலிழப்பிற்கு எந்தவிதமான cyber தாக்குதல்களும் காரணம் அல்ல என CBSA தெளிவுபடுத்தியுள்ளது.
