அகதிகள் visa, நிரந்தரக் குடியுரிமை விதிகளில் கனடிய மத்திய அரசு மிக முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது.
தமது விண்ணப்பங்களில் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை மறைக்கும் அல்லது அறிவிக்காத அகதிகளுக்கான நிரந்தரக் குடியுரிமை விலக்குச் சலுகையை (PR Exemption) கனடிய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக இரத்து செய்துள்ளது.
கனடாவின் புதிய குடிவரவு, அகதிகள், குடியுரிமை துறை அமைச்சர் Lena Metlege Diab வெள்ளிக்கிழமை (11) இந்த மாற்றத்தை அறிவித்தார்.
இந்த புதிய விதியின்படி, அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பிக்கும் போது தங்களது குடும்ப உறுப்பினர்களின் அனைத்து விவரங்களையும் தெரிவிக்க தவறும் பட்சத்தில், அவர்கள் கனடாவின் நிரந்தர குடியுரிமையைப் பெற தகுதியற்றவர்களாக கருதப்படுவார்கள்.
கனடாவின் குடிவரவு நடைமுறைகளை முறைப்படுத்தும் நோக்கில், சர்வதேச மாணவர்களின் வருகை குறைப்பை தொடர்ந்து மத்திய அரசு எடுத்துள்ள அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கையாக இது நோக்கப்படுகிறது.
இந்த புதிய விதியால் குறிப்பிட்ட சில பிரிவினர் மிக அதிகமாகப் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடா அரசின் இந்த மாற்றத்திற்கு அகதிகள் நல அமைப்புகளும் மனித உரிமை ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
கடந்த ஏழு ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த இந்த மனிதாபிமானக் கொள்கையை, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, அகதிகள் அமைப்புகளுடன் எவ்வித கலந்தாய்வு செய்யாமல் அமைச்சர் Lena Metlege Diab இரத்து செய்திருப்பது பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் குடும்பங்களை ஒன்றிணைப்பதில் கனடா என்றும் உறுதியாக உள்ளது என விமர்சனங்களுக்கு கனடிய குடிவரவுத் துறை அதிகாரப்பூர்வ விளக்கம் வழங்கியுள்ளது.
