அமெரிக்காவுடனான கனடாவின் வர்த்தக பேச்சுவார்த்தைகள் ஒருபோதும் நிறுத்தப்படவில்லை என கனடாவின் வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் தீவிரமடைந்து, புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், அமெரிக்க அதிகாரிகளுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளும் தொடர்புகளும் ஒருபோதும் நின்றுவிடவில்லை என Dominic LeBlanc தெரிவித்துள்ளார்.
Alberta மாகாணத்தில் நடைபெற்று வரும் அமைச்சரவை திட்டமிடல் கூட்டத்தின் இறுதி நாளில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இரு நாட்டு அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக Dominic LeBlanc உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி Donald Trump-புடன் தொடர்ந்து பேசி வருவதாக அண்மையில் கனடிய பிரதமர் Mark Carney உறுதிப்படுத்தியுள்ள நிலையில் அமைச்சர் Dominic LeBlanc-கின் இந்த உறுதிப்பாடு வெளியானது.
வர்த்தகப் போரினால் கனடா நிறுவனங்களும் தொழில்துறையினரும் சந்தித்து வரும் பாதிப்புகளை குறைக்கும் நோக்கில், கனடாவின் மாகாணங்களுக்கு இடையிலான உள்நாட்டு வர்த்தகத் தடைகளை நீக்குவது குறித்து இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீவிரமாக ஆலோசிக்க பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் புதிய வர்த்தக கெடுபிடிகளால் கனடா நிறுவனங்கள் தங்களது வர்த்தக பாதிப்புகளை உணர ஆரம்பித்துள்ள தற்போதைய இக்கட்டான சூழலில், கனடிய அமைச்சரவையின் அவசர கூட்டம் வெள்ளிக்கிழமையுடன் (11) நிறைவடைகிறது.
