வரவிருக்கும் காலம் கனடியர்களுக்கு “கடினமானதாக இருக்கும்” என பிரதமர் Mark Carney எச்சரித்துள்ளார்.
கனடாவின் பதில் வரிகள் அமுலுக்கு வந்துள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் செவ்வாய்க்கிழமை (08) அவசர உரையாற்றினார்.
அமெரிக்காவுடனான இந்த வர்த்தக மோதலால் கனடாவின் பொருளாதாரம், நுகர்வோர் பாதிக்கப்படலாம் என பிரதமர் தனது அவசர தேசிய உரையில் குறிப்பிட்டார்.
கனடியர்கள் வரவிருக்கும் சவாலான சூழ்நிலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் எனவும் Mark Carney கேட்டுக்கொண்டுள்ளார்.
இது எமது வாழ்வாதாரப் போராட்டம் என தனது உரையில் குறிப்பிட்ட பிரதமர், “செழிப்படைவதற்குத் தேவையான அனைத்தும் எங்களிடம் உள்ளன,” என தனது உரையில் கூறினார்.
அரசாங்கக் கொள்கைகள், அமெரிக்காவின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் அளிக்கும் பதில்கள் குறித்து கனடியர்களுக்குத் தகவல்களைத் தெரிவிப்பதற்காக, கடந்த இலைதுளிர் காலத்தில் Mark Carney ஆரம்பித்த தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த உரை அமைந்துள்ளது.
கனடா, அமெரிக்காவுக்கு இடையிலான வர்த்தகப் போர் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கனடாவின் பதில் வரிகள் செவ்வாய் முதல் அதிகாரப்பூர்வமாக அமுலுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவுடன் முறையான வர்த்தக பேச்சுவார்த்தைகள் எதுவும் தற்போது “நடைபெறவில்லை” என அமைச்சர் Dominic LeBlanc அலுவலகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
