Toronto பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்து ஆடம்பர வாகனங்களை திருடிய வழக்கில் நான்கு சிறுவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.
13 முதல் 17 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்களை York பிராந்திய காவல்துறை கைது செய்துள்ளது.
Project Howler என்ற பெயரில் நடத்தப்பட்ட தீவிர விசாரணைக்குப் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வீடுகளின் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து, அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் ஆடம்பர வாகனங்களின் திறப்புகளை திருடி, வாகனங்களைக் கடத்துவது அவர்களின் வழக்கமாகும் என காவல்துறையினர் கூறினர்.
சில சம்பவங்களில் இவர்கள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டியதாகவும் காவல்துறை தெரிவிக்கிறது.
கடந்த மாதம் 26-ஆம் திகதி, Richmond Hill பகுதியில் திருடப்பட்ட வாகனத்தில் மூன்று சந்தேக நபர்கள் பயணிப்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.
அன்று இரவு 11 மணியளவில் அவர்களை Toronto-வில் சுற்றி வளைத்த காவல்துறையினர் அவர்களை துரத்திப் பிடித்தனர்.
பின்னர் August 28 அன்று நான்காவது சிறுவன் கைது செய்யப்பட்டான்.
இவர்களிடமிருந்து திருடப்பட்ட 7 ஆடம்பர வாகனங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.
Toronto-வைச் சேர்ந்த 13 வயது, 14 வயது, இரு 17 வயது சிறுவர்கள் இந்த கும்பலில் அடங்குகின்றனர்.
கனடாவின் இளஞ்சிறார் குற்றவியல் நீதிச் சட்டத்தின் இவர்களது பெயர்கள், அடையாளங்கள் வெளியிடப்படவில்லை.
இவர்கள் மீது திருட்டுப் பொருட்களை வைத்திருந்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மேலும் பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படலாம் என்பதால் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இவர்களுக்கு எதிரான குற்றசாட்டுகள் இதுவரை நீதிமன்றில் நிரூபிக்கப்படவில்லை.
