அமெரிக்காவுக்கு எதிரான கனடாவின் வரிகள் நடைமுறைக்கு வந்தன.
நள்ளிரவு முதல் அமெரிக்கா மீது கனடா விதித்துள்ள $27.6 பில்லியன் பெறுமதியான பொருட்கலுக்கான வரிகள் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தன.
இது இரு நாட்டு வர்த்தக பதற்றத்தை மேலும் தீவிரமாக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
அமெரிக்காவின் வரிகளை தனது தொழிலாளர் தினச் செய்தியில் பிரதமர் Mark Carney சாடினார்.
அதேவேளை இரு நாடுகளுக்கும் இடையே இறுதி நேர பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு எந்த ஒரு முயற்சியும் முன்னெடுக்கப்படவில்லை என கனடிய பிரதமரின் அலுவலகம் உறுதிப்படுத்தியது.
நள்ளிரவு முதல் 700-க்கும் மேற்பட்ட அமெரிக்க பொருட்கள் மீது கனடாவின் 15 முதல் 50 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்படுகிறது.
கடந்த மாதம் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump கனடா மீது விதித்த 50 சதவீத வரிக்கு விடுக்கப்படும் நேரடி பதிலடி இதுவாகும்.
கனடாவின் எதிர்-வரிகள் அமுலுக்கு வந்துள்ள நிலையில், இந்த வர்த்தகப் போரினால் கனடா நுகர்வோருக்கு ஏற்படப்போகும் பொருளாதாரப் பாதிப்புகள் குறித்த உண்மைகளைப் பிரதமர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் ஏன் முறிந்தன, நிராகரிக்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின் முழு விவரங்கள் என்ன என்பதைப் பிரதமர் Mark Carney நாடாளுமன்றத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் சமர்ப்பிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் தொடர்ந்து கனடாவை குறிவைத்து சமூக ஊடகங்களில் Donald Trump தாக்குதல்களை முன்னெடுக்கிறார்.
கனடாவின் எதிர்-வரிகள் அமுலுக்கு வர சில மணி நேரங்களே இருந்த நிலையில் திங்கட்கிழமை கனடாவை தனிப்பட்ட முறையில் குறிவைத்துத் தனது சமூக ஊடகப் பக்கங்களில் Donald Trump மிகக் கடுமையான வசைச்சொற்கள், மிரட்டல்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான 18 மாத வர்த்தகப் போரின் “மிக முக்கியமான வாரம்” இதுவாகும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
கனடாவின் எதிர்-வரிகள் மிகவும் துல்லியமாக திட்டமிடப்பட்டுள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அமெரிக்காவின் வரவிருக்கும் November இடைக்காலத் தேர்தலில், குடியரசுக் கட்சியினர் ஆதிக்கம் செலுத்தும், ஊசலாடும் மாநிலங்களின் (Swing States) வாக்காளர்களைக் குறிவைத்தே இந்த வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
