விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஏழு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எதிலும் NDP தலைவர் போட்டியிட மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
நான்கு மாகாணங்களின் ஏழு நாடாளுமன்ற தொகுதிகளில் விரைவில் இடைத் தேர்தல்கள் நடைபெற வேண்டிய நிலை உள்ளது.
ஆனால், NDP தலைவர் Avi Lewis அவற்றில் எதையும் வெல்ல முயற்சிக்க மாட்டார் என கட்சியின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
Avi Lewis கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதில் தனது நேரத்தையும் கவனத்தையும் செலவிடத் திட்டமிட்டுள்ளார் என NDP செய்தித் தொடர்பாளர் Donya Ziaee கூறினார்.
அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, Avi Lewis நிதி திரட்டுதல், வலுவான உள்ளூர் வேட்பாளர்கள், முக்கிய ஒருங்கிணைப்பாளர்களை அடையாளம் காணுதல், களப்பணியை வலுப்படுத்துதல் ஆகியவற்றிலும் ஈடுபடுவார் எனவும் கூறப்படுகிறது.
NDP கட்சிக் குழு, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்களுக்கு இணங்கவே தேர்தலில் போட்டியிடும் முயற்சியை அவர் ஒத்தி வைத்திருப்பதாக கட்சி கூறியது.
NDP நாடாளுமன்றத்தில் தற்போது ஐந்து இடங்களை மட்டுமே கொண்டுள்ளது.
கடந்த March மாதத்தில் 56 சதவீத ஆதரவைப் பெற்று NDP தலைமைப் பொறுப்பை Avi Lewis வென்றார்.
அவர் ஒருபோதும் தேர்தலில் வெற்றி பெற்றவர் இல்லை என்பது Avi Lewis எதிர்கொண்ட பிரதான விமர்சனமாகும்.
தலைமைப் பொறுப்பை வெற்றி பெறுவதற்கு முன்னதாக, Avi Lewis தேசிய ரீதியில் NDP கட்சிக்காக இரண்டு முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
அவர் முதலில் 2021-இல் West Vancouver-Sunshine Coast-Sea-to-Sky தொகுதியில் போட்டியிட்டார்.
பின்னர் 2025-இல், அவர் Vancouver Centre தொகுதியில் போட்டியிட்டார்.
இந்த இரண்டு தேர்தல்களிலும் அவர் மூன்றாவது இடத்தில் வந்தார்.
நாடாளுமன்றத்தில் தற்போது வெற்றிடமாக உள்ள நான்கு தொகுதிகளான Chicoutimi–Le Fjord, Quebec, Beaches–East York, Ontario, North Vancouver-Capilano, British Colombia, Saint-Hyacinthe-Bagot-Acton, Quebec ஆகியவை உள்ளன.
இந்தத் தொகுதிகளில் இடைத் தேர்தல்கள் நடைபெறுவதற்கான சாத்தியமான மிக முந்தைய திகதி August 10 ஆகும்.
தவிரவும் Rosemont-La Petite-Patrie, Quebec, Yorkton-Melville, Saskatchewan, Laurier-Sainte-Marie, Quebec ஆகிய தொகுதிகள் விரைவில் வெற்றிடமாக உள்ளன.
வரவிருக்கும் இடைத் தேர்தல்களை எப்போது அறிவிப்பது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என பிரதமர் Mark Carney கடந்த மாதம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பிரதமரின் இந்தக் கருத்து இடைத்தேர்தல் கட்டம் கட்டமாக நடத்தப்படக்கூடும் என்பதைக் குறிக்கிறது.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகி, நாடாளுமன்ற தொகுதி வெற்றிடமான பின்னர், அந்த உறுப்பினர் பதவி விலகியதிலிருந்து 11 முதல் 180 நாட்களுக்குள் பிரதமர் இடைத் தேர்தலை நடத்த வேண்டும்.
ஒரு இடைத் தேர்தல் 36 நாட்கள் என்ற குறுகிய காலத்திலோ அல்லது 50 நாட்கள் என்ற நீண்ட காலத்திலோ நடைபெறலாம்.
இது ஒரு தொகுதி வெற்றிடமான பின்னர், 47 நாட்கள் முதல் ஏழு மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் வாக்கெடுப்பு திகதியை நிர்ணயிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
