அமெரிக்கத் தூதரக துப்பாக்கிச் சூடு குறித்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த March மாதம் அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த 19 வயது சந்தேக நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக Toronto காவல்துறை தெரிவித்துள்ளது.
Toronto பெரும்பாகத்தில் துப்பாக்கிச் சூடுகளை நடத்துவதற்காக இளைஞர்கள் பயன்படுத்தியதற்கான விரிவான விசாரணை குறித்த புதிய விவரங்கள் வெளிவந்துள்ள நிலையில் இந்த கைது குறித்த அறிவித்தல் வெளியானது.
தூதரக துப்பாக்கிச் சூடு தொடர்பாக தேடப்பட்டு வந்த இரண்டாவது சந்தேக நபரான Zara Jabbi கைது செய்யப்பட்டதை, காவல்துறை வியாழக்கிழமை (18) உறுதிப்படுத்தியது.
ஒரு செய்திக்குறிப்பில், பல குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள Zara Jabbi கைது செய்யப்பட்டதை காவல்துறை உறுதிப்படுத்தியது.
March 10 காலை 5:30 மணியளவில் University Avenue கட்டிடத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது.
இந்தக் கட்டிடத்தில் அமெரிக்கத் துணைத் தூதரகம் அமைந்துள்ளது.
இதில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
இளைஞர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டு Toronto-வில் சமீபத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுகளுக்கு பின்னணியில் “வெளிநாட்டு சக்திகள்” இருப்பதாக நம்பப்படுவதாக, கனடாவின் குற்றத் தடுப்புக்கான Secretary of State Ruby Sahota தெரிவித்த மறுநாள் இந்தக் கைது குறித்த செய்தி வெளியாகியுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கும் வெளிநாட்டுத் தொடர்பு உள்ளதா என்பதை காவல்துறை உறுதிப்படுத்தவில்லை.
ஆனால் யூத வழிபாட்டு தலங்கள், யூதப் பாடசாலைகள், அமெரிக்கத் தூதரகம் உள்ளிட்ட பல்வேறு இலக்குகளை நோக்கி துப்பாக்கிச் சூடுகளை நடத்துவதற்காக சமூக விரோதிகளால் இளைஞர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதாக இந்த வார ஆரம்பத்தில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில், Toronto காவல்துறைத் தலைமை அதிகாரி Myron Demkiw கூறியிருந்தார்.
இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பான மற்றொரு சந்தேக நபரான, 18 வயதான Sheldon Tracy-Stewart என காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டவர், June 11 அன்று கைது செய்யப்பட்டார்.
ஐரோப்பாவில் 18 பயங்கரவாதத் தாக்குதல்களை திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு ஈராக்கியரை, Toronto அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுடன் கடந்த May மாதம் அமெரிக்க நீதித்துறை தொடர்பு படுத்தியது.
துப்பாக்கி சூடு நடத்தும் இந்த வலையமைப்புகளுக்கு பின்னால் யார் உள்ளனர் என்பதை துல்லியமாக கண்டறிய காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக Toronto காவல்துறைத் தலைமை அதிகாரி குறிப்பிட்டார்.
