நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்திவைப்பதற்கான வாய்ப்பெதுவும் இல்லை என பிரதமர் Mark Carney தெரிவித்துள்ளார்.
இந்த மாதம் நடைபெறும் மூன்று இடைத் தேர்தல்களில் Liberal கட்சி வெற்றி பெற்றால் Mark Carney நாடாளுமன்றத்தில் ஒரு பெரும்பான்மையை பெறும் சாத்தியக்கூறு உள்ளது.
இந்த நிலையில் நாடாளுமன்ற பெரும்பான்மை பெற்ற பின்னர், பிரதமர் நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்திவைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக செய்தி வெளியானது.
ஆனாலும் அதற்கான சாத்தியக்கூற்றை Mark Carney முற்றாக மறுத்தார்.
“அப்படி ஒரு சாத்தியக்கூறு இருப்பது என் சிந்தனையில் ஒருபோதும் தோன்றியதில்லை,” என தெரிவித்த பிரதமர், “ஆகவே, அது பரிசீலனையில் இருப்பதாக கூறப்பட்டதைக் கேட்டு நான் அடைந்த ஆச்சரியத்திற்கு அளவே இல்லை” எனவும் கூறினார்.
கடந்த April மாதம் நடந்த பொதுத் தேர்தலில் இருந்து, Liberal கட்சி பெரும்பான்மை அரசாங்கத்தை அமைப்பதற்கான 172 ஆசனங்கள் என்ற எண்ணிக்கைக்கு அண்மித்து இருந்து வருகிறது.
Justin Trudeau காலத்து முன்னாள் அமைச்சர்கள் சிலர் தூதரகப் பதவிகளை ஏற்றுக் கொண்டு தங்கள் பதவிகளில் இருந்து விலகினர்.
ஆனாலும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி மாறல் காரணமாக அந்த இடைவெளியை ஈடுசெய்து, 170 ஆசனங்களை Liberal கட்சி கொண்டுள்ளது.
இந்த மாதம் 13-ஆம் திகதி நடைபெறும் மூன்று இடைத்தேர்தல்களில் இரண்டு தொகுதிகள் Liberal கட்சியின் கோட்டைகளாக கருதப்படுகின்றன.
இந்த மூன்று இடைத்தேர்தல்களில் Liberal கட்சி வெற்றி பெற்றால், அரசாங்கம் நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக, Globe and Mail பத்திரிகை திங்கட்கிழமை (30) செய்தி வெளியிட்டது.
நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ஒத்திவைக்க ஆளுநர் நாயகத்தின் அனுமதி தேவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
