தமிழ் இனப்படுகொலையில் பலியானவர்களுக்கு Toronto நகர சபையில் நினைவு கூறப்பட்டது.
வியாழக்கிழமை (21) நடைபெற்ற சபை அமர்வின் போது நகரசபை உறுப்பினர் நீதன் சான் தமிழ் இனப்படுகொலை நினைவு தினம் குறித்து உரையாற்றி பலியானவர்களை நினைவு கூர்ந்தார்.
இந்த வரலாறு எமது பொதுவெளிகளில் கூட்டு நினைவுகளில் அர்த்தமுள்ள வகையில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.
அன்று நகரசபை அமர்வுகளில் பங்கேற்ற நகரசபை உறுப்பினர்களும், அமர்வுகளை பார்வையிட கலந்து கொண்ட பெரும் எண்ணிக்கையிலான தமிழர்களும் தமிழ் இனப்படுகொலையில் பலியானவர்களுக்கு அமைதி வணக்கமும் செலுத்தினர்.
தமிழ் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களையும், அதனால் உருவான தலைமுறைகளையும் ஆழ்ந்து நினைவுகூரும் வகையில், Toronto நகர மன்றத்தில் அன்று ஒன்றுகூடல் ஒன்றும் நடைபெற்றது.
நகரசபை உறுப்பினர் நீதன் சானின் அலுவலகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
கடந்த திங்கட்கிழமை (18) நடைபெற்ற தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தில் உரையாற்றிய நகர முதல்வர் Olivia Chow, Toronto நகரில் விரைவில் தமிழ் இனப்படுகொலை நினைவு தூபி அமைக்கப்படும் என உறுதியளித்தார்.
இந்த நிலையில் Toronto நகர சபையில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலை நினைவு நிகழ்வில் நகர முதல்வர் Olivia Chow, நகரசபை உறுப்பினர்கள் நீதன் சான், பார்த்தி கந்தவேள் உள்ளிட்டவர்கள் உரையாற்றினர்.
இந்த நிகழ்வில் கனடிய தமிழர் தேசிய அவை, அனைத்துலகத் தமிழர் பேரவை ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
முதல் முறையாக Toronto நகர சபையில் தமிழ் இனப்படுகொலை நினைவு தினம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
