அதிகரித்து வரும் எரிவாயு விலையின் மத்தியில் கனடிய அரசாங்கம் எரிவாயு வரியைக் குறைக்குமா என்ற கேள்விக்கு கனடிய நிதி அமைச்சர் நேரடியாக பதிலளிக்கவில்லை.
அதிகரித்து வரும் எரிவாயு விலையின் மத்தியில் அதிலிருந்து ஓரளவு நிவாரணம் அளிக்கும் வகையில் எரிவாயு வரியைக் கைவிடுவது குறித்து நிதி அமைச்சர் François-Philippe Champagne உறுதியான எந்த முடிவையும் எடுக்கவில்லை.
மத்திய கிழக்கின் யுத்தம் தற்போது மூன்று வாரங்களுக்கு மேல் நீடித்து வருகிறது.
முக்கியத்துவம் வாய்ந்த Hormuz நீரிணையை ஈரான் தொடர்ந்து தடுத்து வருவதால், உலகளவில் எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளன.
செவ்வாய்க்கிழமை (24) நிலவரப்படி, கனடாவில் நாடளாவிய ரீதியில் எரிபொருளின் சராசரி விலை 173.9 சதமாகும்.
இது ஒரு மாதத்திற்கு முன்னர் 129.9 சதமாக இருந்தது.
இந்த நிலையை கண்காணித்து வருவதாக செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் ஆரம்பத்தில் François-Philippe Champagne கூறினார்.
இந்த நிலையில் மத்திய கிழக்கின் பதற்றத்தைத் தணிப்பதற்காக கூட்டு நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Hormuz நீரிணை மீண்டும் திறக்கப்பட வேண்டும் என கனடிய அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனால் இதில் கனடாவின் பங்காளிப்பு குறித்த கேள்விக்கு கனடிய பாதுகாப்பு அமைச்சர் David McGuinty பதிலளிக்கவில்லை.
