அமெரிக்காவின் New York LaGuardia விமான நிலைய ஓடுபாதையில் Air கனடா விமானம் தீயணைப்பு வாகனம் மீது மோதியதில் இருவர் பலியாகினர்.
ஞாயிற்றுக்கிழமை (22) இரவு 11:30 மணிக்கு சற்றுப் பின்னர் இந்த விபத்து நிகழ்ந்தது.
72 பயணிகள், நான்கு பணியாளர்களுடன் சென்ற Air கனடா விமானம் தீயணைப்பு வாகனம் மீது மோதியது.
இதில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர் – 41 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Montreal Trudeau சர்வதேச விமான நிலையத்திலிருந்து தனது பயணத்தை தொடர்ந்து New York LaGuardia விமான நிலையத்தில் தரையிறங்கிய போது AC8646 விமானம் தீயணைப்பு வாகனம் மீது மோதியது.
அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் முன்னெடுக்கும் விசாரணைக்கு உதவும் வகையில், LaGuardia விமான நிலையம் குறைந்த பட்சம் திங்கள் பிற்பகல் வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்படுகிறது.
இந்த விசாரணையில் உதவ கனடாவின் போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியம் ஒரு புலனாய்வு குழுவை அனுப்ப விருப்பதாக தெரிவித்தது.
தவிரவும் இந்த சம்பவம் குறித்த விசாரணைக்கு உதவுவதற்காக தங்கள் அதிகாரிகள் LaGuardia பயணிப்பதாக Air கனடா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த விபத்து மனித தவறால் ஏற்பட்டது என அமெரிக்க ஜனாதிபதி Donald Trump தெரிவித்தார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் கனடிய பிரதமர் Mark Carney தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிகாரிகள் தமது விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், கனடா அவர்களுடன் தொடர்ந்தும் தொடர்பில் உள்ளதாக கனடாவின் போக்குவரத்து அமைச்சர் Steven McKinnon தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து தாம் மிகுந்த வருத்தம் அடைவதாக அமெரிக்காவுக்கான கனடிய தூதர் Mark Wiseman கூறியுள்ளார்.
Conservative தலைவர் Pierre Poilievre, Québec மாகாண முதல்வர் François Legault, Montreal நகர முதல்வர் Soraya Martinez Ferrada உள்ளிட்ட பல கனடிய அரசியல் தலைவர்கள் தமது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
