ஈரான் மீதான அமெரிக்க, இஸ்ரேலிய தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறியதாக தெரிகிறது என கனடிய பிரதமர் Mark Carney கூறினார்.
இந்த நிலையில் அனைத்து தரப்பினரும் சர்வதேச ஒழுங்கின் விதிகளை மதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஈரான் மோதல் நான்காவது நாளை எட்டிய நிலையில், செவ்வாய்க்கிழமை (03) மத்திய கிழக்கு முழுவதும் தாக்குதல்கள் தொடர்கின்றன.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒரு பெரிய தாக்குதலை கடந்த சனிக்கிழமை (28) ஆரம்பித்தது.
ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்களை சந்தேகத்திற்கு இடமின்றி ஆதரிப்பதாக கடந்த வார இறுதியில் Mark Carney கூறியிருந்தார்.
செவ்வாயன்று அவுஸ்திரேலியாவில் செய்தியாளர்களிடம் பேசிய Mark Carney, மத்திய கிழக்கில் தொடரும் பயங்கரவாதத்தின் முக்கிய காரணியாக ஈரான் உள்ளது என குற்றம் சாட்டினார்.
ஈரானிய மக்களை ஆதரிக்கும் வகையில், ஈரான் அணு ஆயுதம் பெறுவதை தடுக்கும் முயற்சிகளை கனடா ஆதரிப்பதாகவும் Mark Carney கூறினார்.
“சர்வதேச சட்டம் அனைத்து போர் குணத்தையும் பிணைக்கிறது என்பதை கனடா மீண்டும் உறுதிப்படுத்துகிறது,” எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதல் குறித்து “எங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை, இதில் பங்கேற்கும் படி எங்களிடம் கேட்கப்படவில்லை” எனவும் Mark Carney செய்தியாளர்களிடம் கூறினார்.
பொதுமக்கள் மீதும் அவர்களின் உள்கட்டமைப்பு மீதான ஈரானின் தாக்குதல்களை கனடா கண்டிப்பதாக கூறிய கனடிய பிரதமர், அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட அனைத்து தரப்பினரும் “சர்வதேச ஒழுங்கின் விதிகளை மதிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
