இலங்கையில் செயல்படும் முக்கிய கனடிய, சர்வதேச கூட்டாளர்களை கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜுனிதா நாதன் சந்தித்தார்.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட அவர், அங்கு கனடா-இலங்கை உறவுகள் குறித்தும் மனிதாபிமான உதவிகளுக்கான கனடாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு குறித்தும் சந்திப்புகளை முன்னெடுத்தார்.
இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் Isabelle Martin -னை கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்ததை ஜுனிதா நாதன் உறுதிப்படுத்தினார்.
இந்த உரையாடலில் சிவில் சமூகத்தினர் முன்வைத்து வரும் தேவைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
2025 November புயலால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்களுக்கான நில உரிமைகள் குறித்த அரசாங்கக் கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியமும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கை பயணத்தின் போது உலக உணவுத் திட்டம் (World Food Programme – WFP), சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (International Committee of the Red Cross – ICRC) ஆகியவற்றின் அதிகாரிகளையும் ஜுனிதா நாதன் சந்தித்தார்.
இந்த அமைப்புகள் கனடாவின் வெள்ள நிவாரண, மனிதாபிமான உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைவதை உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
முன்னதாக சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் தினம் 2026 ஆரம்ப நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள ஜுனிதா நாதன் அழைக்கப்பட்டிருந்தார்.
அங்கு உரையாற்றிய அவர் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த தமிழ்நாடு அரசு உதவிகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
LJI Reporter ரம்யா சேது
