Toronto, Markham நகரங்களில் நடைபெற உள்ள இரண்டு இடைத் தேர்தல்களில் போட்டியிடும் 6 தமிழ் வேட்பாளர்களின் தமிழ்ச் சமூகத்துடனான சந்திப்பு புதன்கிழமை நடைபெற்றது.
Scarborough-Rouge Park இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களான அனிதா ஆனந்தராஜன், நீதன் சான், சியான் சின்னராஜா, அனு ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரும், Markham நகரசபையின் ஏழாம் வட்டார இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களான கிள்ளி செல்லையா, ஆரணி முருகானந்தன் ஆகியோரும் இந்த தமிழ்ச் சமூகத்துடனான சந்திப்பில் கலந்து கொண்டனர்.
தேசியம் ஊடக குழுமத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த நிகழ்வை இலங்கதாஸ் பத்மநாதன் நெறிப்படுத்தியிருந்தார்.
இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இந்த நிகழ்வில் முதல் பிரிவில் Scarborough-Rouge Park தொகுதி தமிழ் வேட்பாளர்களும், இரண்டாவது பிரிவில் Markham நகரசபையின் ஏழாம் வட்டார இடைத் தேர்தல் தமிழ் வேட்பாளர்களும் பங்கேற்றனர்.
ஒவ்வொரு வேட்பாளரும் தாம் தேர்தலில் போட்டியிடுவதற்கான காரணம், தமது பிரச்சார உறுதிமொழிகள், ஏன் தமக்கு வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்ற விபரங்களை உள்ளடக்கிய அறிமுகத்தை வழங்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
பின்னர் கலந்து கொண்டவர்களின் கேள்விகளுக்கு வேட்பாளர்கள் பதிலளித்தனர்.
வரிகள், போக்குவரத்து நெருக்கடிகள், பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களில் வேள்விகள் அமைந்திருந்தன.
Scarborough-Rouge Park தொகுதி இடைத் தேர்தல் வாக்களிப்பு September 29-ஆம் திகதியும், முன்கூட்டிய வாக்களிப்பு September 20, 21-ஆம் திகதிகளிலும் நடைபெறுகிறது.
Markham நகரசபையின் ஏழாம் வட்டார இடைத் தேர்தல் வாக்களிப்பு September 29-ஆம் திகதியும், முன்கூட்டிய வாக்களிப்பு September 26, 27, 28-ஆம் திகதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
