உக்ரைனில் அமைதி ஏற்படும் என கனடிய பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
உக்ரைனின் சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட கனடிய பிரதமர் Mark Carney, அங்கு உரை நிகழ்த்தினார்.
பிரதமர் Mark Carney ஞாயிற்றுக்கிழமை (24) உக்ரைன் தலைநகர் Kyiv சென்றடைந்தார்.
Kyiv நகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க Sophia சதுக்கத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், உக்ரைன் ஜனாதிபதியுடன் இணைந்து கனடிய பிரதமர் உரை நிகழ்த்தினார்.
“Vladimir Putin-னை ஒருபோதும் நம்ப முடியாது என்பதை நாங்கள் அறிவோம்,” என Mark Carney தனது உரையில் கூறினார்.
“உண்மையான அமைதிக்கு உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்கள் தேவைப்படும்” எனவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
உக்ரைனில் அமைதி ஏற்படுவதை கனடா உறுதிப்படுத்தும் எனவும் தனது உரையில் கனடிய பிரதமர் தெரிவித்தார்.
இராணுவ உதவி, பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy-உடன் Mark Carney கலந்துரையாடல்களை முன்னெடுத்தார்.
கனடாவின் 2 பில்லியன் டாலர் இராணுவ உதவி, இரண்டு நாடுகளும் பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து இரு நாட்டின் தலைவர்களும் விவாதித்தனர்.
உக்ரைனின் சுதந்திர தின கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள Mark Carney அழைக்கப்பட்டார் என இந்தப் பயணம் குறித்து பத்திரிகையாளர்களுக்கு விளக்கிய கனடிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடுமையான போரினால் தொடர் பாதிப்புகளை எதிர்கொள்ளும் உக்ரைனுக்கு அவர் மேற்கொள்ளும் முதலாவது அதிகாரப்பூர்வ பயணம் இதுவாகும்.
பிரதமரின் இந்தப் பயணம் கடுமையான செய்தி தணிக்கைக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்டது.
உக்ரைன் தலைநகர் ரஷ்ய ஏவுகணை தாக்குதல்களுக்கு இலக்காகும் நிலையில் இந்த செய்தி தணிக்கை நடைமுறையில் இருந்தது.
