Markham நகரசபையின் ஏழாம் வட்டார இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இரண்டு தமிழர்கள் உட்பட மொத்தம் எட்டு வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
Markham நகரசபையினால் வெளியிடப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட வேட்பாளர் பட்டியலில் இந்தத் தகவல் வெளியானது.
இந்த இடைத் தேர்தல் வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (15) பிற்பகல் 2 மணியுடன் நிறைவடைந்தது.
Pickering–Brooklin நாடாளுமன்ற உறுப்பினராக ஜுனிதா நாதன் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து வெற்றிடமாக உள்ள ஏழாம் வட்டார நகரசபை உறுப்பினர் இடத்தை நிரப்ப இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு எட்டு வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இவர்களில் இரண்டு தமிழர்களும் அடங்குகின்றனர்.
கிள்ளி செல்லையா, ஆரணி முருகானந்தன் ஆகிய தமிழர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.தவிரவும் Kristian Chan, Jenny Chen, Abdul Samad Katawazy, Vicky McGrath, Nimisha Patel, Omar Ullah ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்த தமிழரான வால் புருஷோத்தமன், Shusmita Sharma-Tiwari ஆகியோர் தமது வேட்புமனுவை இறுதி நேரத்தில் மீளப் பெற்றுள்ளனர்.
இந்த இடைத் தேர்தல் வாக்களிப்பு September 29-ஆம் திகதி நடைபெறவுள்ளது.
முன்கூட்டிய வாக்களிப்பு September 26, 27, 28-ஆம் திகதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடைத் தேர்தலை நடத்துவதற்கான செலவு $300,000 என மதிப்பிடப்படுகிறது.
