தேசியம்
செய்திகள்

தமிழர் அங்காடி தொகுதியில் நிகழ்ந்த கொள்ளை சம்பவத்தில் ஆயிரக்கணக்கான டொலர்கள் பெறுமதியான நகைகள் திருட்டு

Scarborough நகரில் தமிழர் அங்காடி தொகுதியில் வியாழக்கிழமை (19) மாலை நிகழ்ந்த கொள்ளை சம்பவத்தில் ஆயிரக்கணக்கான டொலர்கள் பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளன.

Markham & McNicoll சந்திப்பில் அமைந்துள்ள Majestic City தமிழர் அங்காடி தொகுதியில் இந்த கொள்ளை சம்பவம் வியாழன் மாலை 6:30 மணியளவில் நிகழ்ந்தது.

மூவர் இந்த கொள்ளை சம்பவத்துடன் தொடர்பு பட்டிருக்கலாம் என ஆரம்ப விசாரணையின் பின்னர் Toronto காவல்துறையினர் தெரிவித்தனர்.

கொள்ளை சம்பவத்தின் பின்னர் அங்காடி தொகுதியில் இருந்து வெளியேறும் வழியில், சந்தேக நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் காவல்துறையினர் கூறினர்.

இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த வணிக வளாகத்தில் முன்னரும் கொள்ளை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அங்கு வியாபாரம் செய்து வரும் சில வணிக உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

அங்கு போதுமான பாதுகாப்பு இல்லை எனவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் விவரங்கள் எதையும் காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை.

அதேவேளை Majestic City தமிழர் அங்காடி தொகுதிக்கு வெள்ளிக்கிழமை (20) Toronto நகர முதல்வர் மேற்கொள்ள இருந்த பயணம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டது

தமிழர்களுக்கு சொந்தமான சிறு வணிகங்களை பார்வையிட கனடிய தமிழ் வர்த்தக சம்மேளனத்துடன், நகர முதல்வர் John Tory இணைந்து பயணம் ஒன்றை மேற்கொள்ள இருந்தார்.

இந்த நிகழ்வு தமிழ் மரபுரிமை மாதத்தை குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனாலும் வெள்ளி மாலை திடீரென இந்த பயணம் இரத்து செய்யப்பட்டது.

Majestic City தொகுதியில் வியாழன் மாலை நிகழ்ந்த கொள்ளை சம்பவத்தின் எதிரொலியாக அங்காடி நிர்வாகம் இன்றைய நகர முதல்வரின் பயணத்தை ஒத்தி வைக்குமாறு தம்மிடம் கோரியதாக நகர முதல்வர் அலுவலகம் தெரிவித்தது.

Related posts

 Ottawa காவல்துறைத் தலைவர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

தேசிய நினைவு தினம்: போர்களில் பங்கேற்று இறந்தவர்களை கௌரவிக்க நாடு முழுவதும் ஒன்று கூடிய கனடியர்கள்

Lankathas Pathmanathan

அடுத்த ஆண்டு கனடா கடுமையானதும் தவிர்க்க முடியாததுமான மந்த நிலையை நோக்கிச் செல்லும்

Lankathas Pathmanathan

Leave a Comment