கனடா – அமெரிக்கா நாடுகளின் வர்த்தக பிரதிநிதிகள் தொலைபேசியில் உரையாட ஏற்பாடாகியுள்ளது.
கனடாவின் பதில் வரி நடவடிக்கை நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த நிலையில் இருநாட்டு பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை (08) தொலைபேசி வாயிலாக பேச உள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கனடா – அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் போர் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதியான Jamieson Greer, கனடாவின் வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc ஆகிய இருவருக்கும் இடையே அவசர உரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த உரையாடலில் கனடாவின் பதில் நடவடிக்கைக்கு அமெரிக்கா எவ்வாறு எதிர்வினையாற்ற போகிறது, அதன் அடுத்த கட்ட நகர்வுகள் என்ன என்பது குறித்து அமையும் எனத் தெரியவந்துள்ளது.
இரு நாட்டு அதிகாரிகளும் உரையாட உள்ள போதிலும், வர்த்தக முடக்கத்திற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான முறையான பேச்சுவார்த்தைகள் எதுவும் உடனடியாக ஆரம்பிக்க வாய்ப்பில்லை என கனடிய தரப்புகள் கருதுகின்றன.
தவிரவும் கனடா, அமெரிக்கா அதிகாரிகளுக்கு இடையே வாரயிறுதியில் அதிகாரப்பூர்வமற்ற தொடர்புகள் இருந்ததாகவும் தெரியவருகிறது.
முறையான வர்த்தக பேச்சுவார்த்தைகள் எதுவும் உடனடியாக நடைபெறவில்லை என்றாலும், இரு நாட்டு அதிகாரிகளும் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக அமைச்சர் Dominic LeBlanc ஊடகச் செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
