கனடிய முறைகேடுகளின் தொடர் நிகழ்வுகள் குறித்து வெள்ளை மாளிகை குற்றம் சாட்டுகிறது.
அமெரிக்காவிற்கு எதிராக கனடா மேற்கொண்ட வர்த்தக முறைகேடுகள் பட்டியல் என வர்ணிக்கப்பட்ட விவரங்களை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றை, செவ்வாய்க்கிழமை (25) வெள்ளை மாளிகை வெளியிட்டது.
பல வாரங்களாக நடைபெற்ற தீவிர பேச்சுவார்த்தைகளுக்கு பின்னரும், கனடாவும் அமெரிக்காவும் வெள்ளிக்கிழமை (21) இரவு இறுதி நேர வர்த்தக ஒப்பந்தத்தை எட்டத் தவறின.
இந்த நிலையில் “ஜனாதிபதி Trump இறுதியாக கனடாவின் இலவசப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்” என்ற தலைப்பிலான வெள்ளை மாளிகையின் அறிக்கை வெளியானது.
“கனடா பல தசாப்தங்களாக அமெரிக்காவை ஏமாற்றி வருகிறது” என்ற Donald Trump-பின் முந்தைய கூற்றுகளை இந்த அறிக்கை மீண்டும் வலியுறுத்துகிறது.
உலகிலேயே வேறு எந்த நாட்டையும் விட கனடாவிற்கு மிகவும் சலுகையான சந்தை அணுகலை கடந்த வாரம் அமெரிக்கா வழங்கியது என அந்த அறிக்கை கூறுகிறது.
“கூட்டுறவுக்கு பதிலாக, நியாயமற்ற கோரிக்கைகள், பின்வாங்குதல், முற்றிலுமாக நிராகரித்தல் ஆகியவையே கனடாவால் தேர்ந்தெடுக்கப்பட்டன,” என அந்த அறிக்கை தெரிவித்தது.
ஆனாலும் அமெரிக்கா முன்மொழிந்த நிபந்தனைகளில் செய்யப்பட்ட இறுதி நேர மாற்றங்கள் இரு தரப்பு வர்த்தக உடன்படிக்கை எட்டப்படாததற்கு காரணம் என Mark Carney குற்றம் சாட்டியிருந்தார்.
இதை உறுதிப்படுத்தும் வகையில், வர்த்தகப் பேச்சுவார்த்தையின் இறுதி நேரத்தில் அமெரிக்கா மேலதிக நிபந்தனைகளை விதித்ததை அமெரிக்க ஜனாதிபதியும் ஏற்றுக் கொண்டார்.
இதன் காரணமாக சுமார் $28 பில்லியன் மதிப்பிலான கனடியப் பொருட்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி Donald Trump விதித்த 50 சதவீத இறக்குமதி வரிகள் வார இறுதியில் நடைமுறைக்கு வந்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் சுமார் $27.6 பில்லியன் மதிப்பிலான அமெரிக்கத் தயாரிப்புகளுக்கு, அமெரிக்கா விதித்துள்ள அதே அளவிலான சுங்க வரிகளை கனடாவும் விதிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
